தமிழக பாஜகவின் அடுத்த இலக்கு... 3 மாநகராட்சிகளை குறிவைத்து தேர்தல் பணிகள் ஜரூர்..!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்களை வென்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ள பாஜக அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது.
அடிமட்ட அளவில் பாஜகவினர் பொறுப்பில் இருந்தால் தான் மக்களிடம் இன்னும் அதிகமாக கட்சியை கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கும் அண்ணாமலை அதற்கேற்றவாறு வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார்.
அதனடிப்படையில் 3 மாநகராட்சிகளை இலக்காக கொண்டு தமிழக பாஜக தரப்பில் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் வார்டு மெம்பர்கள் இல்லாததால் மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதிகாரிகளோ என்னோட லிமிட்டில் வராது எனக் கூறி புகார் கூறவருபவர்களை தலை கிறுகிறுக்க வைக்கின்றனர்.

நகர்ப்புற
இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முடித்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான முன்னோட்ட பணிகளை பழனிகுமார் ஐ.ஏ.எஸ். தொடங்கிவிட்டார். இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான நகராட்சிகளை வெல்வதோடு 3 மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் இருக்கிறது தமிழக பாஜக.

3 மாநகராட்சிகள்
அதிமுக கூட்டணியில் ஒரு வேளை தொடர்ந்தால் கோவை, திருப்பூர், நாகர்கோவில் ஆகிய 3 மாநகராட்சிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் எண்ணத்தில் உள்ளது தமிழக பாஜக. கோவையை அதிமுக விட்டுக்கொடுக்காவிட்டால் திருப்பூர் மற்றும் நாகர்கோவிலில் போட்டியிட பாஜக தீவிரம் காட்டுகிறது.

சுற்றுப்பயணம்
9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதற்கட்டமாக அந்த மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு அடுத்தபடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தனது சுற்றுப்பயணத்தை அவர் அமைக்கவுள்ளார்.

குழு அமைப்பு
உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக 17 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ள அண்ணாமலை, அந்த குழுவுக்கு பொறுப்புகளை பகிர்ந்துகொடுக்க உள்ளார். மேலும், அந்தக் குழுவில் நடிகை குஷ்பு உட்பட மேற்கொண்டு கூடுதலாக 5 பேர் வரை சேர்க்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications