"பக்கா பிளான்.." இறங்கி அடிக்க ரெடியாகும் ஓலா.. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இதுதான் காரணம்!
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் சூப்பரான ஒரு திட்டம் ஒன்றுடன்தான் களமிறங்கியுள்ளது
சென்னை: உலகமே மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. தனது மிகப் பெரிய திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே, ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் இறங்கியுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுமே இப்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகனங்களைத் தவிர்த்து மின்சார வாகனங்கள் பக்கம் சென்று வருகிறது. உலக வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் மின்சார வாகனங்கள் பக்கம் உலக நாடுகள் செல்கின்றன.
மின்சார வாகனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அதிலும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் 10, 15 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முழுமையாகத் தவிர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மின்சார வாகனம்
இந்தியாவும் மற்ற நாடுகளைக் காட்டிலும் மின்சார வாகனங்களை அதிகமாகவே ஊக்குவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏனென்றால், இந்தியா தனது தேவையில் அதிகப்படியான எரிபொருளை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் அந்நிய செலாவணியும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியா வேகமாக மின்சார வாகனங்களை நோக்கிச் செல்கிறது. பொதுவாகவே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்திலும் தமிழ்நாடே அதில் முன்னிலையில் இருக்கும். ஐடி, கல்வி என்று இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழ்நாடு
ஆனால், மின்சார வாகன துறையில் தமிழ்நாடு டாப் இடத்தில் இல்லை. இந்த நிலையை மாற்ற இப்போது தமிழ்நாடு அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்சார வாகன துறையில் முதலீடு செய்து வருகின்றன. தமிழக அரசும் கூட இதை ஊக்குவிக்கச் சமீபத்தில் தான் திருத்தப்பட்ட மின்சார வாகன கொள்கைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் பிரபல நிறுவனமான ஓலா தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் ஓலா 7,614 கோடி முதலீடு செய்யும் நிலையில், இதன் மூலம் 3000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

பிரம்மாண்ட தொழிற்சாலை
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகன மையத்தை உருவாக்கப் போகிறது.. மேம்பட்ட பேட்டரி தொடங்கி, மின்சார வாகன உற்பத்தி, சப்ளையர் என்று விரிவான ஒரு மின்சார வாகன மையத்தை உருவாக்குவதே ஓலாவின் திட்டமாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே ஒரே இடத்தில் மின்சார வாகனங்களுக்கான அனைத்து எகோசிஸ்டத்தை கொண்ட ஒன்றாகத் தமிழகம் இருக்கும். தமிழ்நாட்டில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ஓலா நிறுவனம் தனது பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஓலா
முதலில் கார் வாடைக்கு விடும் நிறுவனமாக தொடங்கிய ஓலா.. கடந்தாண்டு மின்சார டூ வீலர் சந்தையில் நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஓலா தனது புதிய டூ வீலரை அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் வேற லெவல் வரவேற்பு கொடுக்கவே.. இந்தியாவில் இப்போது அதிகம் விற்பனை செய்யப்படும் மின்சார டூ வீலர் நிறுவனமாக ஓலா மாறியுள்ளது. இப்போது 3 மாடல் டூ வீலர்களை ஓலா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக மின்சார கார்களையும் தயாரிக்க உள்ளதாக ஓலா அறிவித்துள்ளது. மேலும், மின்சார சரக்கு வாகனங்கள் செய்யும் திட்டமும் அவர்களிடம் உள்ளது.

பக்கா பிளான்
இப்படி வரும் காலத்திற்கு பல்வேறு திட்டங்கள் இருப்பதால்.. செலவுகளைக் குறைக்கவும் உற்பத்தியை வேகப்படுத்தவும் ஒரே இடத்தில் அனைத்தையும் உற்பத்தி செய்யும் இடம் ஒன்று ஓலாவுக்கு தேவைப்பட்டது. இதன் காரணமாகவே இப்போது ஓலா தமிழ்நாட்டில் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. பேட்டரி தொடங்கி அனைத்தும் முடிக்கப்பட்ட வாகனம் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் உருவாக்குவதே ஓலாவின் திட்டமாக இருக்கிறது.

ஆய்வு நிறுவனம்
கடந்த ஆண்டு, ஓலா 500 மில்லியன் டாலர் முதலீட்டில் பெங்களூரில் உள்ள அதன் அதிநவீன பேட்டரி மையத்தில் உருவாக்கப்பட்ட முதல் லித்தியம் அயன் செல் என்எம்சி-2170 என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியது. செல் தொடர்பான ஆராய்ச்சிக்கு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த அதிநவீன ஆய்வகம் உலகின் மிகப்பெரிய செல் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும். மின்சார வாகன துறையில் தொடர்ந்து இறங்கி வரும் ஓலா, நாட்டின் மிகப் பெரிய மின்சார வாகன நிறுவனமாக உருவாகவே திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாகவே இப்போது தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.












Click it and Unblock the Notifications