என்ன சொல்றீங்க.. குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட சான்ஸ் இல்லையா? ட்விஸ்ட்?
சென்னை: 2022 குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்னவாகும் இருக்கும், யாரை நிறுத்தினால் ஆட்சேபனையின்றி ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு டெல்லியில் எகிறியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே திமுகவின் அரசியல் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதில் கருணாநிதி முக்கிய சக்தியாக திகழ்ந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் இறுதியுடன் நிறைவடைகிறது. பாஜகவின் சித்தாந்தப்படி 75 வயதை கடந்தவர் குடியரசுத் தலைவராக வர முடியாது என்பதால் மீண்டும் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன் மொழிய நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. அப்படியானால் புதிய நபர் ஒருவரை தான் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவுள்ளது.

பாஜக பரிசீலனை
அந்த வகையில் வெங்கய்ய நாயுடு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், சத்தீஸ்கர் ஆளுநரும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவருமான அனுசியா உகே, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு ஆகியோர் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பரிசீலனையில் இருக்கிறார்கள். இந்த முறை பாஜக தரப்பில் பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

சரத் பவார்
இதனிடையே காங்கிரஸ் சார்பில் இன்னும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக எந்த முன்னெடுப்பும் இல்லை. இனி வரும் நாட்களில் அது தொடர்பாக சோனியாகாந்தி எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளராக சரத் பவார் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சும் உள்ளது.

திமுகவின் முடிவு?
இதில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. வெங்கய்ய நாயுடுவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக முன் நிறுத்தினால் அவரை மாற்றுக்கருத்தின்றி திமுக நிச்சயம் ஆதரிக்கும் என்றும் அதே வேளையில் தமிழிசை உட்பட வேறு யாரையாவது குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக போட்டியிட வைத்தால் திமுகவின் முடிவு வேறு மாதிரி இருக்கும் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

யாரும் அறியாத ஒருவர்
இதனிடையே இது தொடர்பாக திமுக முக்கிய எம்.பி. ஒருவரிடம் நாம் பேசினோம், ''எனக்கு தெரிந்து வெங்கய்ய நாயுடுவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பாஜக முன் வராது. ஏனெனில் விவரமான ஆட்களை அங்கு ஒதுக்கித் தான் வைப்பார்கள். மோடி நினைத்திருந்தால் அத்வானியை எப்போதோ குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. அதனால் இந்த முறையும் சர்ப்ரைஸான முடிவை தான் பாஜக எடுக்கும். யாரும் அதிகம் அறிந்திராத ஒருவரேயே குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்தக் கூடும் என கருதுகிறேன். இதெல்லாம் எனது தனிப்பட்ட கருத்து.'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications