நழுவிட்டாரே! அண்ணா பற்றிய அண்ணாமலை பேச்சு! வந்து விழுந்த கேள்வி! ஓ பன்னீர் செல்வம் ரியாக்சனை பாருங்க
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து அண்ணாமலை சமீபத்தில் கூறிய கருத்து என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வத்திடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த ரியாக்சன் என்பது கேள்வியில் இருந்து நழுவும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். முன்னாள் முதல்வரான இவர் அதிமுகவில் ஒற்றை தலைமை பூதாகரமாக வெடித்த நிலையில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் ஓ பன்னீர் செல்வம் பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு அவர் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛இன்று பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக நாங்கள் உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறோம். சுய மரியாதையை உலகமெங்கும் விதைத்த முதல் பிதாமகன் தந்தை பெரியார் என்பது அனைவரும் அறிந்ததே. சமதர்ம சோசியலிச சமுதாயத்தை சமதர்மத்தை நடுநிலையுடன் அனைத்து மக்களும் பெற வேண்டும் என போராடிய பெரியாருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா, உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்'' என்றார்.
இதையடுத்து அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சமீபத்தில் சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்த பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‛‛மதுரையில் 1956ல் தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பிடி ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார்'' இதுபற்றி ஓ பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழப்பப்பட்டது.
அதாவது ‛‛அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அதிமுகவினர் அனைவரும் கண்டித்துள்ளனர். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?'' என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛ இன்று தந்தை பெரியார் பிறந்தநாள். இங்கு விவாதங்களுக்கு இடமில்லாமல் அனைவரும் மனமகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். மற்ற பிரச்சனைகளை வெளியே வைத்து கொள்வோம்'' என்று மட்டுமே தெரிவித்தார். இதன்மூலம் அண்ணாமலை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் நழுவியுள்ளதால் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பெரியாருக்கு மரியாதை செய்வது தொடர்பாக இன்று ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம்,‛‛பெரியார் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால் நீங்கள் வைத்த படத்துக்கு பதில் வேறு படத்தை வைத்து அவர்கள் மரியாதை செய்துள்ளனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛தந்தை பெரியார் அனைவருக்கும் பொதுவானவர். யார் ஏற்பாடு செய்தாலும் அவருக்கு மரியாதை செலுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனால் அதற்கு நீங்கள் தான் (பத்திரிகையாளர்) பதில் சொல்ல வேண்டும்'' என கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications