அதிமுக- விசிக கூட்டணி? வைகை செல்வன் உடனான சந்திப்பில் நடந்தது என்ன.. உடைத்து பேசிய திருமாவளவன்
சென்னை: இன்று அதிமுக மாஜி அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே திடீர் சந்திப்பு நடைபெற்றது. இது தமிழ்நாடு அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியது. இதற்கிடையே வைகை செல்வன் உடனான சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும் கூட இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. கடந்த தேர்தல்களைப் போலவே இந்த முறையும் தேர்தலில் வெல்லும் முனைப்பில் திமுக இருக்கிறது.

மற்றொரு பக்கம் அதிமுகவும் வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இப்போது அதிமுக- பாஜக கூட்டணியை உறுதியாகியுள்ளது. இதற்கிடையே வேறு கட்சிகளையும் கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
திருமாவளவன்- வைகை செல்வன் சந்திப்பு
இந்தச் சூழலில் விசிக திருமாவளவனுடன் அதிமுக மாஜி அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்துப் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆனது. திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதற்காக அவர் திருச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது தான் திருமாவளவனை வைகை செல்வன் தனியாகச் சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.
திருமாவளவன் விளக்கம்
இதற்கிடையே இந்த சந்திப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனே விளக்கமளித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், தனது இலக்கிய பணிகள் குறித்தே வைகை செல்வன் தன்னிடம் குறிப்பிட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்களே.. நாங்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தோம். நான் தங்கியிருந்த ரூமிற்கு பக்கத்து ரூமில் அவர் தங்கியிருந்தார். அவர் தங்கியிருப்பதால் சும்மா சந்திக்கலாம் எனப் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அவரே நேராக அறைக்கு வந்துவிட்டார். எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அவ்வளவு தான் அந்த சந்திப்பு.
அரசியல் பேசவில்லை
அதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை. அவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். சங்க இலக்கியம் தொடர்பாக 2500 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் சீக்கிரம் வெளியிட உள்ளேன் என்றார். அதில் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அவ்வளவு தான் அந்த சந்திப்பு" என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், "பாஜக அதிமுக கூட்டணி இப்போது அமைந்திருந்தாலும் கூட கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்பட்டு இருக்கிறது என்பது குறித்து எடப்பாடி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. பாஜகவினர் தான் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதிமுகவினர் இது குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. அதிமுக முதலில் கூட்டணி ஆட்சி என்பதை அறிவிக்கட்டும். பிறகு பேசலாம்" என்றார்.
கள் இறக்க எதிர்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், "கள் என்பது உணவு என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. கள் அருந்துவதால் உடலுக்கு எந்தவொரு தீங்கும் இல்லை என்ற தகவலும் பரப்பப்படுகிறது. கள் என்ற சொல்லுக்கே போதை என்று தான் பொருள். மது என்றாலும் கள் என்றாலும் ஒன்றுதான். போதைப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
கள் இறக்கும் தொழிலாளர்களின் நலனுக்காகப் பேசுகிறோம் எனச் சொல்லி போதைப் பொருட்களின் பயன்பாட்டை வலியுறுத்துவது சரியானது இல்லை. மது உட்பட அனைத்து வகையான போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதையே விசிக வலியுறுத்தி வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications