சிக்கலாகி போச்சே.. நெருக்கடியில் தேமுதிக! டக்கென இறங்கி வந்த பிரேமலதா விஜயகாந்த்! பின்னணி இதுதானாம்!
சென்னை: 14 லோக்சபா சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என சமீபத்தில் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தற்போது, "14 + 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான், அது எனது கருத்தோ கட்சியின் கருத்தோ இல்லை" என பல்டி அளித்துள்ளார். இதன் பின்னணி என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேமுதிகவும் கூட்டணி அமைப்பது தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தேமுதிக இரட்டை இலக்கங்களில் சீட் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் 4 லோக்சபா சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் எனும் முடிவை நோக்கி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14 லோக்சபா + 1 ராஜ்யசபா: மேலும், இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பிரேமலதா, மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை, பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் கூட்டணி நிலைப்பாடு குறித்த தேமுதிகவின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்." என்றார்.
பல்டி அடித்த பிரேமலதா: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி என்பது எனது கருத்தோ, கட்சியின் கருத்தோ கிடையாது. இது மாவட்ட செயலாளர்களின் கருத்து மட்டுமே. இதுவரை யாருடனும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகளில் இடம்பெறுவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இறங்கி வர காரணம் இதுதானா?: முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில் அவரது ஆஃபரை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை. 3 சீட்டுக்கு மேல் தேமுதிகவுக்கு தருவதற்கு அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்குமே விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அக்கட்சிகள் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை தொடரவில்லையாம். பாஜக தரப்பில், 4 லோக்சபா + 1 ராஜ்யசபா சீட் தர ரெடி, ஆனால், தாமரை சின்னத்தில் நிற்க நீங்கள் ரெடியா என தேமுதிக தரப்பிடம் கேட்கப்பட்டதாம். அதிமுகவோ, 3 லோக்சபா + 1 ராஜ்யசபா என்றால் மேற்கொண்டு பேசலாம் என கட் அண்ட் ரைட்டாக தெரிவித்து விட்டதாம். இதன் காரணமாகவே தற்போது பிரேமலதா இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications