இப்படி இருந்தால் தட்கலில் டிக்கெட் எப்படி கிடைக்கும்.. இதெல்லாம் ரயில் பயணிகளின் வாழ்நாள் கனவு சார்
சென்னை: வந்தே பாரத், புல்லட் ரயில்கள், ஏசி பெட்டி ரயில்களை விடவும் இந்தியாவில் மிகவும் சாதாரண ரயில்களே அதிகம் தேவை.. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.. சாமானிய மக்கள் அதிகம் பயணம் செய்யும் பொதுப்பெட்டி ரயில்களையும், ஸ்லீப்பர் கோச் ரயில்களையும் குறைக்காமல் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
நமது நாட்டில் ஏழை எளிய மக்கள் தொலை தூரங்கள் செல்ல, ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகிறார்கள். விமானங்களில், கார்களில் செல்வதை கனவில் கூட நினைக்க முடியாத நிலையில், பேருந்து அல்லது ரயில்களில தான் செல்கிறார்கள். பேருந்தில் கூட கட்டணம் அதிகமாக உள்ளதாக குடும்பத்தோடு சென்றுவர முடியாத நிலையில், ரயில் பயணம் ஒன்றுதான் பலரும் விரும்பும் பயணமாக இருக்கிறது.

ரயிலில் பயணிக்க விரும்புவதற்கு முக்கிய காரணம் கட்டணம் குறைவு மற்றும் வேகமான பயணம், கழிவறை உள்ளிட்ட வசதிகள், அசதி, களைப்பு தெரியாது போன்றவற்றை காரணமாக சொல்லலாம். ஆனால் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க விரும்புவோருக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவது இல்லை என்பது கசப்பான உண்மை.
ரயிலில் ஸ்லீப்பர் கோச்களில் பயணிக்கவே அதிகப்படியான மக்கள் விரும்புவார்கள். ஆனால் போதிய ஸ்லீப்பர் கோச்கள் ரயில்களில இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்தை லாபகரமாக நடத்த விரும்பும் இந்திய ரயில்வே சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ஏசி பெட்டிகளை அதிகரிப்பது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏசி பெட்டிகள் மட்டுமின்றி, வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்குவதிலும் கடந்த ஐந்து வருடங்களாக அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய ரயில்வே.
ஆனால் ஏழை பயணிகள் அதிக அளவில் செல்ல விரும்பும் பொதுப்பெட்டிகளை காலத்திற்கு தகுந்தாற்போல் அதிகரிப்பது, ஸ்லீப்பர் கோச்களை தேவைக்கு தகுந்தாற்போல் அதிகரிப்பது போன்றவற்றில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. சாதாரண இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயிலில் சென்னையில் இருந்து நெல்லைக்கோ அல்லது மதுரைக்கோ முயற்சி செய்தால் 3 மாதம் முன்பே முயற்சிக்க வேண்டும். கடைசி மாதத்தில் அவ்வளவு எளிதாக கிடைக்காது. தட்கலில் தினமும் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் எண்ணிக்கை பல கோடியை தாண்டும்.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, குடியரசு தினம், சுதந்திர தினம், ரம்ஜான், கோடை விடுமுறை காலங்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு போன்ற காலங்களில் ரயிலில் அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடாது. அதேபோல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளிலும் டிக்கெட் கிடைக்காது. தட்கலில் என்றால் வெட்டிவேலை என்கிற அளவிற்கு தான் நிலைமை இருக்கிறது. அவ்வளவு எளிதாக தட்கலில் புக்கிங் செய்துவிட முடியாது..
முன்பெல்லாம் அந்தந்த ஊரில் தான் மக்கள் வசித்து வந்தார்கள். ஆனால் 15, 20 வருடங்களில் நிலைமை அடியோடு மாறிவிட்டது. வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வரும் ரயில்களில் பல்லாயிரம் பேர் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறி மிக கடினமான சூழலில் வருகிறார்கள்..

தமிழ்நாட்டை பொறுத்தவரை, கோவை ரயிலிலும், நெல்லை ரயிலிலும், மதுரை ரயிலிலும், கன்னியாகுமரி ரயிலிலும் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறி இரவில் பயணித்து காலையில் இறங்கினால் தெரியும். அந்த பயணம் எவ்வளவு கசப்பானதாகவும், மோசமானதாகவும் இருக்கும் என்பதை உணர முடியும். இது எல்லாருக்குமே தெரியும்.. ஆனால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அழுத்தம் கொடுப்பது இல்லை..
சமூக ஊடங்களில் ரயிலில் அதிகப்படியான கூட்டங்கள் இருக்கும் வீடியோ அண்மைக்காலங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன,. அந்த வீடியோவை பார்க்கும் போது, வந்தே பாரத் ரயில்களை விடவும், புல்லட் ரயில்களை விடவும் சாதாரண ரயில்களே அதிகம் தேவை என்பதை உணர்த்தும். அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ரயில்களை அதிக அளவில் இயக்கி, பயணத்தை இனிமையாக்க வேண்டும் என்பதே பயணிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தட்கலில் புக்கிங் செய்வோருக்கு என்று சர்வ சாதாரணமாக கிடைக்கிறதோ அன்று தான் ரயில் பயணிகள் வாழ்நாள் கனவு நிறைவேறும்.












Click it and Unblock the Notifications