மாண்டஸ் புயலின் கண்பகுதி எப்போது கரையை கடக்கும்.. அந்த 2 மணி நேரம்தான் முக்கியம்.. மரக்காணத்திலா?
சென்னை: மாண்டஸ் புயலானது சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு இன்று இரவு 11.30 மணி முதல் அதிக கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே தென் கிழக்கு திசையில் 260 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதனால் 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு மரக்காணம் அருகே கரையை கடக்கும்.
மிரட்டும் மாண்டஸ் புயல்: மாமல்லபுரத்தில் தானாக கடலுக்குள் செல்லும் படகுகள்.. பதறும் மீனவர்கள்!
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியால் கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல இடங்களில் மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் அரிப்பால் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. சிலரது படகுகள் கடலில் இழுத்து செல்லப்பட்டன.
படகுகள் வலைகள்
இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். புயல் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2 அல்லது 3 மணி வரை கரையை கடக்கும். சென்னை கடற்கரையை புயல் நெருங்கும் போது கனமழை பெய்யும். சென்னை, சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
20 கிமீ தூரம்
புயலின் கண் பகுதியான 20 கி.மீ. விட்டத்திற்கு இருப்பதால் இந்த நிகழ்வானது சாலையை கடப்பது போல் நிகழாது, மிக மெதுவான செயல்முறையாக இருக்கும். புயல் கரையை கடக்கும் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளுக்கு கனமழை கொடுக்கும். புயலானது வலுவிழந்து கரையை கடந்தவுடன் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் கனமழையை கொடுத்துவிட்டு பின்னர் அரபிக் கடலில் போய் கலந்து விடும்.
3 பகுதிகள் இருக்கும்
கடலின் முன்பகுதி, நடுபகுதி, கடை பகுதி என 3 வகைப்படும். இதில் நடுபகுதி கரையை கடக்கும்போதுதான் கனமழை பெய்யும். கிழக்கு கடற்கரைச் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளார்கள். எனவே அவசிய பணியை தவிர்த்து மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் கடற்கரை பகுதிக்கு சென்று வேடிக்கை பார்ப்பது உள்ளிட்டவைகளை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.