வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.. ஹைகோர்டில் தகவல்
சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே சர்வதேச மையம் கட்டப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
வடலூரில் சத்தியஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்த்தும், ஆதரித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான அரசாணையை எதிர்ப்பது ஏன், அதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன, வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைந்தால் வள்ளலாரின் தத்துவங்கள், கொள்கைகள் உலகம் முழுவதும் பரவும் அல்லவா, வள்ளலாரின் தத்துவங்களை ஊக்குவிக்கும் அரசு முடிவில் எந்த தவறும் இல்லையே என கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, கடந்த 1867 - 1872 ம் ஆண்டுகளில் 106 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட சத்தியஞான சபை அப்படியே இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் விருப்பம். மேலும் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்வது வள்ளலாரின் விருப்பத்துக்கு முரணானது என, வள்ளலாரின் ஆறாம் திருமுறை, உத்திர ஞான சிதம்பர மான்மியம் உள்ளிட்ட பாடல்களை மேற்கோள்காட்டி வாதம் வைக்கப்பட்டது. மேலும் பெருவெளியில் புராதன சின்னங்கள் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதால் அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டது
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர், தொல்லியல் துறை ஆய்வில், இப்பகுதியில் சில கட்டுமானங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தைச் சேர்ந்த அவை தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சத்தியஞான சபையில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம், பெரிய ஞானியை பராமரிக்காதது ஏன், எப்படி ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து மொத்த 106 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
சர்வதேச மையம் கட்ட திட்ட அனுமதி பெறப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் துவங்கப்படும் எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
சத்திய ஞான சபைக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications