விஜய் இல்லை! ஆளுநர் தான் சூப்பர் சிஎம்! ஜனாதிபதி ஆட்சி வந்தால் என்ன நடக்கும்? மொத்தமாக கைமாறும் பவர்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரம் கடந்தும் இன்னும் யாரும் ஆட்சியை அமைக்கவில்லை.. ஒரு பக்கம் தவெக தலைவர் விஜய், மெஜாரிட்டி மேஜிக் எட்ட போராடிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஜனாதிபதி ஆட்சி வரலாம் என்ற பேச்சும் இருக்கிறது. தற்போதைய அரசின் பதவிக்காலம் நாளை மே 10 உடன் முடியும் நிலையில், ஜனாதிபதி ஆட்சி குறித்த விவாதங்கள் அரசியல் அரங்கில் அனல் பறக்கின்றன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயலிழந்துவிட்டது என்று ஆளுநர் கருதினால், அவர் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்யலாம். இதுபோல ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், முதலமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்படும். மாநிலத்தின் முழு அதிகாரமும் ஆளுநரின் கைக்கு மாறும்.. அவருக்கு உதவ ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள்.

சட்டமன்றத்தின் கதி?
சட்டமன்றம் முழுமையாகக் கலைக்கப்படலாம் அல்லது 'செயலிழந்த நிலையில்' வைக்கப்படலாம். அதாவது எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள், ஆனால் சபை கூட முடியாது. உதாரணத்திற்கு மணிப்பூர் வன்முறையின்போது சட்டசபை கலைக்கப்படவில்லை.. மாறாக சஸ்பென்ட் செய்யப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான அனுமதி பெற்றால், ஆறு மாதங்கள் வரை ஜனாதிபதி ஆட்சி நீடிக்கும். தேவைப்பட்டால் இது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
பொம்மை வழக்கு
முன்பெல்லாம் மத்திய அரசு நினைத்த நேரத்தில் மாநில ஆட்சிகளைக் கலைத்த வரலாறு உண்டு. சட்ட ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் ஒரு ரிப்போர்ட்டை கொடுப்பார். அதை வைத்து எல்லாம் மாநில அரசுகள் கலைக்கப்பட்டது உண்டு. ஆனால், 1994ல் உச்சநீதிமன்றம் வழங்கிய எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பு ஒரு மிக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
அதாவது பெரும்பான்மை என்பதை ஆளுநர் மாளிகையின் ரகசிய அறைகளில் அல்ல, சட்டமன்றத்தின் தளத்தில்தான் நிரூபிக்க வேண்டும்.. இதுதான் அந்தத் தீர்ப்பின் சாரம். இந்தத் தீர்ப்புதான் இன்று வரை ஆளுநர்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு ஒரு கடிவாளமாக இருந்து வருகிறது.
அதிகாரம் யாருக்கு?
முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை நீக்கப்பட்டு, நிர்வாகம் அதாவது Bureaucracy நேரடியாக அதிகாரத்தைக் கையில் எடுக்கும். இதில் மாநிலத்தில் அதிகார மையமாக ஆளுநர் இருப்பார்.. குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதால் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாநிலத்தின் முழு அதிகாரம் ஆளுநரிடம் வந்து சேரும். அவரே மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருப்பார். ஆளுநருக்குத் துணையாக டெல்லியால் இரண்டு அல்லது மூன்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள். கொள்கை முடிவுகளை எடுப்பதில் இவர்களே முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
மாநிலத்தின் அச்சாணியாக தலைமைச் செயலாளர் இருப்பார்.. அரசியல்வாதிகள் இல்லாத சூழலில், மாநிலத்தின் தலைமைச் செயலாளர் கிட்டத்தட்ட எல்லா முக்கிய முடிவுகளையும் எடுப்பார்.. அனைத்து துறைகளும் இவர் மூலமே ஒருங்கிணைக்கப்படும்.
மாவட்ட அளவில்
மாவட்ட அளவில் பார்க்கும்போது, கலெக்டர்களிடமே அதிகாரம் இருக்கும்.! அமைச்சர்களின் தலையீடு இல்லாததால், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவார்கள். அதேபோல கல்வி, சுகாதாரம் போன்ற ஒவ்வொரு துறையையும் அந்தந்தத் துறைச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.
உள்ளாட்சிகள்
ஜனாதிபதி ஆட்சி வந்தால் கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் போய்விடும் என்பது ஒரு தவறான புரிதல். அதுதான் இல்லை! 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள்) என்பது ஒரு தனித்துவமான நிர்வாக அடுக்கு. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதால் மட்டும் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் அல்லது மேயர்கள் தங்கள் பதவியை இழக்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் பணிகளைச் செய்யலாம்.
அதேநேரம் மாநில அரசிடம் இருந்த அதிகாரம் இப்போது ஆளுநரிடம் இருப்பதால், ஏதேனும் ஒரு உள்ளாட்சி அமைப்பில் ஊழல் அல்லது நிர்வாகத் தோல்வி நடந்தால், மாநிலச் சட்டங்களைப் பயன்படுத்தி அதை ஆளுநர் கலைக்க முடியும். ஆனால், இது ஜனாதிபதி ஆட்சியின் நேரடி விளைவு அல்ல, தனியான ஒரு சட்ட நடவடிக்கை மட்டுமே.
எப்படி இருக்கும்
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது விஜய்யால் பெரும்பான்மைக்குத் தேவையான அந்த இரு இடங்களைப் பெற முடியவில்லை என்றால்.. எம்எல்ஏக்கள் பதவியேற்க மாட்டார்கள். தமிழக அரசின் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் போய்விடும்.அதேநேரம் கோவையில் உள்ள ஒரு குக்கிராமத்திலோ அல்லது மதுரையின் ஒரு ஊராட்சியிலோ பெரிய மாற்றம் தெரியாது. அங்குள்ள கிராமப் பஞ்சாயத்து வழக்கம் போலக் கூடும். சாலைப் பணிகள், குடிநீர் வசதிகள் குறித்து அந்த ஊர்த் தலைவர் கையெழுத்திட முடியும்.














Click it and Unblock the Notifications