பொன்முடி வீட்டில் தொடரும் ரெய்டு.! வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதிலை பாருங்க
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலை 7 மணியளவில் தொடங்கிய ரெய்டு இன்னும் தொடர்ந்து வருகிறது.
சென்னை, விழுப்புரம் என பல்வேறு இடங்களிலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்குத் தொடர்புடையோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்து வருகிறது. குறிப்பாக பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

சோதனை: மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.. இந்த சோதனைக்கு திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுக்க பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள முயலும் நிலையில், அதைத் தடுக்கவே மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை பயன்படுத்துவதாகச் சாடி வருகின்றனர்.
எதற்காக இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், சட்ட விரோத வெளிநாட்டு முதலீடுகள் விவகாரம் தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது 2008இல் அப்போது திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் உரிய அனுமதியில்லாமல் நடந்த முதலீடுகள் குறித்து சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்த டைரி: சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கே நின்று கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி காரிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் இருந்தும் டைரி உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். இருப்பினும், ரெய்டில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் சோதனை முடிந்த பின்னரே துல்லியமாகத் தெரியவரும்.
திமுக தலைவர்கள் பலரும் இந்த ரெய்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்: அப்போது அங்கே பாளையத்தில் சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை எங்கெல்லாம் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையோ.. அங்கெல்லாம் அவர்கள் உள்நோக்கம் மற்றும் குரோத பார்வையோடு அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி ரெய்டு நடத்துகிறார்கள். இதற்குக் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
எதிர்க்கட்சிகள் மீது பாஜக குறுக்கு வழியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் எந்தவொரு சக்தியும் பாஜகவுக்கு கிடையாது. அமலாக்கத் துறை நடத்தும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இதைப் பொதுமக்களே கூறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும் இரண்டாவது அமைச்சர் பொன்முடி ஆவார். முன்னதாக கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications