களமிறக்கப்பட்ட தனி டீம்.. கட்டணத்தை உயர்த்தினாலே ஆக்ஷன்! ஆம்னி பேருந்துகளுக்கு சிவசங்கர் எச்சரிக்கை
சென்னை: பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையின் போது கட்டணத்தை உயர்த்தியும், போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். நீண்ட விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் திரும்புவார்கள்.
ஆனால், இதுபோன்ற காலகட்டங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் மிக அதிகமாக உள்ளதாகப் புகார்கள் எப்போதும் எழும். வழக்கமான கட்டணத்தைவிட இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உச்சத்தில் இருக்கும்.

விழாக் காலங்கள்
இதைத் தடுக்க அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சோதனை நடத்தப்பட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பார்கள். கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் இதுபோன்ற புகார் அதிகம் எழுந்தது. அப்போது தமிழக அரசே அதிகபட்ச கட்டணம் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் கூட பேருந்து கட்டணத்தை பண்டிகை காலங்களில் ஆம்னி நிறுவனங்கள் உயர்த்தியே வருகின்றன.

அமைச்சர் சிவசங்கர்
அடுத்த வாரம் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போதே ஆம்னி கட்டணம் குறித்த புகார்கள் எழத் தொடங்கிவிட்டன. இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த அழகுமலையில் உள்ள தனியார்ப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது பள்ளியின் சார்பாக மாவட்ட, மாநில அளவில் விளையாட்டு மற்றும் யோகாசன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

சிறப்புப் பேருந்துகள்
மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வருகின்ற பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை சென்னையின் 5 பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 16 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்
அதேபோன்று பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அவரவர் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருவதற்கும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகளால் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வந்தனர். அதே போன்று பொங்கல் பண்டிகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடமும் சங்கத்திடமும் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை ஆணையாளர் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறும், கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடக்க எடுக்கப்படும்.

தனி டீம்
இதற்காகத் தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் ஆம்னி பேருந்துகள் சோதனை மேற்கொள்வார்கள். கட்டணத்தை அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி உயர்த்தும் அனைத்து ஆம்னி பேருந்துகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.. பொங்கல் விழாவுக்காக அரசு சார்பில் வரும் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை காலத்தில் எப்போதும் சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல இந்தாண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications