வதந்தியை பரப்பாதீங்க.. அன்னிக்கு இதான் நடந்துச்சு.. மயில்சாமி இறப்பு பற்றிய தகவல்.. மகன் சொன்ன உண்மை
மயில்சாமி மறைவு பற்றி பரவும் தகவல்கள் பற்றி அவரது மகன்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை : மயில்சாமி பற்றி தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பினால், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என மயில்சாமியின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயில்சாமியின் மறைவு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் தேதி அதிகாலையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதி ஊர்வலத்தில் பார்த்தோம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன், தங்கள் அப்பா மறைவின்போது தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். அப்பா அடிக்கடி சொல்வார், காசு சம்பாதிப்பது பெரிய விஷயம் இல்லை. மக்களை சம்பாதிக்கணும் என்று, அவர் நிறைய பேரை சம்பாதித்துள்ளார் என்று அவரது இறுதி ஊர்வலத்தில் பார்த்தோம் எனத் தெரிவித்தனர். மேலும், தங்கள் அப்பாவின் மறைவு குறித்து ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமான செய்தி வந்ததாகவும், அதனால் அதுகுறித்து அப்பா உடன் இருந்த நான் விளக்கம் அளிக்கிறேன் என்றும் மயில்சாமியின் மகன் அன்பு தெரிவித்தார்.

டப்பிங் முடித்துவிட்டு
மேலும் அவர் பேசுகையில், சிவராத்திரி அன்று மாலை டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அப்பா வீட்டுக்கு வந்தார். பின்பு கோவிலுக்கு போகலாம் என்று சொன்னார். கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். போகும் வழியில் 7.30 மணிக்கு சாப்பிட்டோம். 8 மணிக்கு கோவிலுக்கு சென்றோம். உள்ளே சென்றவுடன் ட்ரம்ஸ் சிவமணி சாருடன் போனில் பேசினார். அவர் வேறொரு கோவில் கச்சேரியில் இருந்தார். அதை முடித்துவிட்டு அங்கு வருவேன் என்றார். அதன்படி 11 மணிக்கு கோவிலுக்கு வந்தார். பிறகு இசை கச்சேரி நடந்தது.

10 நிமிடத்தில்
எப்போதும் போல அப்பா மகிழ்ச்சியாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். நிகழ்ச்சி முடிவதற்கு 2.45 மணி ஆகிவிட்டது. பின்பு வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். சாப்பிட்டவுடன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம். அப்போது, சாப்பாடு நெஞ்சிலேயே நிற்பது போல இருப்பதாகச் சொன்னார். அப்படி இருந்தால் எப்போதுமே சுடுதண்ணீர் குடிப்பர். உடனே சுடு தண்ணீர் வைத்துக் கொடுத்தேன். குடித்துவிட்டு தூங்கச் சென்றார். நானும் அம்மாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். நான் தூங்கச் சென்ற பின் 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார். அப்பாவுக்கு மூச்சு விட கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார். நான் கீழே சென்று பார்த்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்து சென்றோம்.

இதுதான் நடந்தது
போகும் வழியிலேயே அவர் என் மீது சாய்ந்த நிலையில் இருந்தார். தொடர்ந்து என்னால் கார் ஓட்ட முடியவில்லை. பின்னர் ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவமனைக்கு சென்றவுடன் அப்பாவை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். இருந்த போதும் நான் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்தேன். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் சென்றேன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தான் நடந்தது.

நடவடிக்கை எடுப்போம்
எங்கள் அப்பா விட்டுச் சென்றதை நானும் என் தம்பியும் தொடர்வோம். அவரின் செல்போனை அணைத்து வைக்கப் போவதில்லை. நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் செய்த பணிகளை நாங்கள் தொடர்வோம். எங்கள் அப்பா எங்களிடம் எப்பவும் பொய் சொல்லாதீர்கள், நேர்மையாக இருங்கள் என்றார். குடிப்பேன் என்று அவர் சொன்னாலும் அவர் வெளியிடத்தில் குடித்ததாக யாரும் பார்க்கமுடியாது. அப்பா குடிப்பதை நிறுத்திவிட்டார். சில யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதுபோல தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications