ஓகே.. அடுத்து இதுதான் வேலை.. சாட்டை துரைமுருகன் கைதை அடுத்து.. எம்பி செந்தில்குமார் தந்த க்ளூ!
சென்னை: யூ டியூபர் சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் இது குறித்து ட்வீட் செய்து உள்ளார்.
Recommended Video
நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியாகி இருந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கைதாகி உள்ளார்.
தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறி பிணையில் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், கலவரத்தை தூண்டும் வகையிலும் குமரியில் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைதாகி உள்ளார்.

பேச்சு
கன்னியாகுமரியில் மலைகளை குடைவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சாட்டை துரைமுருகன் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவினர் பலர் நேற்று காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். கன்னியாகுமரியிலும் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. முதல்வர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் சாட்டை துரைமுருகன் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில்தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

செந்தில் குமார் எம்பி
சாட்டை துரைமுருகனுக்கு எதிராக திமுக எம்பி செந்தில் குமார் அளித்த புகார் இதில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இது தொடர்பாக செந்தில் குமார் எம்பி போலீசில் அளித்த புகாரில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூ-டியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன் (@saattai online) என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களை தவறாக பேசியும் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை கேலி செய்யும் வகையில் அவரது யூ-டியூப் சமுக வலைத்தள சேனலில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

நடவடிக்கை
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை கேலிசெய்யும் வகையில் சித்தரித்தும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். எனவே துரைமுருகன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரது (@saattai online) யூ-டியூப், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என்று தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் செந்தில் குமார் எம்பி புகார் அளித்து இருந்தார்.

புகார் மேல் புகார்
அதோடு தனது இன்னொரு ட்வீட்டில் Sattai YouTube சேனல் LMobi போன்ற வெளிநாட்டு ஸ்பான்சர்களின் உதவியுடன் வீடியோக்களைப் பதிவேற்றுகிறது, அது ஒரு வெளிநாட்டு ஊடகம். இந்தியாவில் வீடியோக்களைப் பதிவேற்றியது சட்டவிரோதமானதா, அது நமது ஊடகச் சட்டங்களுக்கு எதிரானதா என்று விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை
விருப்பம் உள்ளவர்கள் என்னை போல் காவல் துறை/ Online cybercrime மூலம் @Saattaidurai மீது புகார் அளிக்கலாம். புகாரில் பெண்கள்,குழந்தைகள் தலைவர்களை ஆபாசமாக பேசியதிற்காக அவரது YouTube channel முடக்க வேண்டும் என்று சேர்த்த புகார் அளிக்கவும். நிச்சயம் மிக மிக விரைவில் நடவடிக்கை என்று செந்தில்குமார் எம்பி குறிப்பிட்டு இருந்தார்.

கைது
திமுக எம்பி செந்தில்குமார் தொடர்ந்து இணையத்திலும், போலீசிலும் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக புகார் அளித்து வந்த நிலையில்தான் தற்போது சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்றே துரைமுருகனின் கைது குறித்து செந்தில்குமார் க்ளூ கொடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காத்திருந்த அனைவருக்கும். Good news. நல்ல செய்தி, என்று தனது ட்வீட்டில் சாட்டை துரைமுருகன் கைது குறித்து மறைமுகமாக இவர் குறிப்பிட்டார்.

முடக்கம்
அவர் குறிப்பிட்டது போலவே சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் துரைமுருகனின் யூ டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் என்றும் செந்தில்குமார் எம்பி கூறியுள்ளார். ஏற்கனவே அவரின் சேனலை முடக்க வேண்டும் என்று தனது புகார் கடிதத்தில் செந்தில் குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போது செய்துள்ள ட்வீட்டில், ஓகே. அடுத்து வேலை அந்த YouTube channel முடக்குவதுதான், என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் சாட்டை துரைமுருகனின் யூ டியூப் கணக்கு விரைவில் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications