பயமுறுத்தும் ஓமிக்ரான் கொரோனா "BF.7".. இதன் அறிகுறிகள் என்னென்ன? இந்த 4 விஷயங்கள் ரொம்ப முக்கியம்!
சென்னை: ஓமிக்ரான் BF.7 மற்றும் BF. 12 வகை கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டால் அதனால் என்னென்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,242 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே கடந்த நவம்பருக்கு முன்பாகவே குணமடைந்துவிட்டனர்.

ஓமிக்ரான்
ஓமிக்ரான் என்னாவது கொரோனாவின் B.1.1.529 வகை ஆகும். இந்த ஓமிக்ரானின் கிளை வைரஸ்தான் BA.5 வகை. இதில் இருந்து உருவான இன்னொரு கிளைதான் BA.5.2.1.7. இதைத்தான் சுருக்கமாக BF.7 என்று அழைக்கிறார்கள். BF 12 என்பது ஓமிக்ரானில் உருவான இன்னொரு கிளை வைரஸ் ஆகும். இந்த BF.7 மற்றும் BF.12 இரண்டும்தான் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. BF.7 வகை கொரோனா தொடக்கத்தில் சீனாவில் பரவிய ஆதி கொரோனாவான D614G வகையை விட 4.4 மடங்கு வலிமை வாய்ந்தது.

கொரோனா
அதாவது இது அதிக வலிமை கொண்டது. ஆதியில் பரவிய கொரோனாவை விட வலிமையாக இருக்கும். இதன் அர்த்தம் இந்த கொரோனா இன்னும் வேகமாக பரவும். சமயங்களில் ஏற்கனவே கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் இது தாக்கும். முக்கியமாக ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, வேக்சின் ஆற்றல், இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது. சரி இந்த வகை ஓமிக்ரான் தாக்கினால் அதனால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அறிகுறிகள் என்ன?
பொதுவாக டெல்டா கொரோனா தாக்கிய போது அதனால் மிகப்பெரிய அளவில் உடலில் அறிகுறிகள் ஏற்பட்டன. டெல்டா அறிகுறிகள் என்று பார்த்தால் வாசனை இழப்பு பலருக்கு முக்கிய அறிகுறியாக இருந்தது. இரண்டாவது சுவை இழப்பு முக்கியமான அறிகுறியாக இருந்தது. அதேபோல் குளிர், உடல் கூச்சம் மூன்றாவது அறிகுறியாக இருந்தது. நான்காவதாக மோசமாக டெல்டா நோய் தாக்கிய நபர்களுக்கு மூச்சு இறைப்பு ஏற்படும் அறிகுறிகள் வந்தது. ஆனால் ஓமிக்ரான் காரணமாக இந்த 4 அறிகுறிகள் ஏற்படுவது இல்லை. மாறாக வேறு சில 4 வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அதில் உடல் சோர்வு முக்கியமான அறிகுறியாக இடம்பிடித்துள்ளது.

ரொம்ப முக்கியம்
இது போக மூட்டுகளில் ஏற்படும் வலி இரண்டாவது பெரிய முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக சளி அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சளி இருந்தால் அது ஓமிக்ரானாக இருக்கலாம். கடைசியாக தலைவலியும் நான்காவது பெரிய ஓமிக்ரான் அறிகுறியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் உள்ளன. இந்த அறிகுறிகள் உங்களுக்கும் தோன்றினாலும் நீங்கள் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications