மெல்லிய "கொடூரத்தை" அம்பலப்படுத்தியதற்கு நன்றி! தி கேரளா ஸ்டோரி படம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஆளுநர் ரவி இன்று நுங்கம்பாக்கத்தில் பார்த்தார். இதனிடையே இது குறித்து அவர் தனது ட்விட்டரிலும் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பிய படம் என்றால் அது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தான். காஷ்மீர் பைல்ஸ் கடந்தாண்டு வெளியான போது என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடந்து வருகிறது.
கேரளே ஸ்டோரி படத்திற்குக் குறிப்பிட்ட சில மாநிலங்களை வரி விலக்கை அறிவித்திருந்தன. அதேநேரம் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தடை விதித்தன. இதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தடையை நீக்கியது தனிக்கதை.

தி கேரளா ஸ்டோரி: இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே இது பேசுபொருள் ஆனது. கேரளா மாநிலத்தில் வசிக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது போலவும் அங்கே வைத்து அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது போலவும் அதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது அப்போதே சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. தமிழ்நாட்டில் இந்தப் படம் 6ஆம் தேதி திரையிடப்பட்ட போதிலும், 7ஆம் தேதி முதல் திரையிடப்படவில்லை.
தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்த்து பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள பிரிவியூ திரையரங்கத்தில் இன்று மாலை தி கேரளா ஸ்டோரி படத்தைத் தனது மனைவியுடன் பார்த்துள்ளார். பிரிவியூ தியேட்டருக்கு வந்த ஆளுநர் ரவியை படத்தின் தயாரிப்பாளர் நேரில் வரவேற்றார்.
ஆளுநர் ரவி: இதனிடையே கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து ஆளுநர் ரவி சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டரில், "தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலில் கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட போதிலும், அதன் பிறகு மல்டிபிளக்ஸ்கள் படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம் அறிவித்தார். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தது.

அதில், "தி கேரளா ஸ்டோரி படத்துக்குத் தமிழக அரசு நிழல் தடை விதித்துள்ளதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். பார்வையாளர்களின் வரவேற்பு குறைவாக இருந்ததால் அவர்களைப் படத்தைத் திரையிடவில்லை.. திரையரங்குகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதை மட்டுமே தமிழக அரசால் செய்ய முடியும்.. பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது" என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications