பிக் பாஸில் விஜய்க்கு பஞ்ச் பேசி விஜய் சேதுபதி பதிலடி? ஆனால் அதுக்கு முன் போட்ட போஸ்ட் தெரியுமா!
சென்னை: "உசுப்பேத்தறவனிடம் உம்முனும்.. கடுப்பேத்துறவனிடம் கம்முனும் இருந்தா.. வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என்று நடிகர் விஜய் பேசியிருந்தார். ஆனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் விஜய் சேதுபதி "உம்முன்னு இருக்கிறதும் தப்பு... கம்முனு இருக்கிறதும் தப்பு.." என்று கூறியது விவாதமானது. நடிகர் விஜய் மாநாடு நடந்தநாளில் விஜய் சேதுபதி இப்படி பேசி விஜயின் கருத்துக்கு மாறுபடுகிறாரா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் விஜய் மாநாடு பற்றி விஜய் சேதுபதி வெளியிட்ட போஸ்ட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடி அறிமுகத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினார்.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளையும், தனது கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார்? என்பதையும், எதிர்கால திட்டம் பற்றியும் விளக்கமாக பேசியிருந்தார்.
அதன்படி நடிகர் விஜய் தனது கொள்கை எதிரியாக பாஜக மற்றும் அரசியல் எதிரியாக தமிழகத்தை ஆளும் திமுக இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதோடு பாஜக பிளவுவாத அரசியல் செய்வதாகவும், திமுக குடும்ப அரசியல் செய்து ஊழல் கபடதாரிகளாக இருப்பதாகவும் வெளிப்படையாக மேடையில் விமர்சனம் செய்தார். நடிகர் விஜயின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. கடந்த 2 நாட்களாக விஜய் பேசியது தான் விவாதமாகி வருகிறது.

இதற்கிடையே தான் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பேசியுள்ளதாக தகவல் பரவ தொடங்கியது. நடிகர் விஜயும், விஜய் சேதுபதியும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் விஜய் மாநாடு நடந்த நாளில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இந்த டயலாக்கை பேசியிருக்கிறார். இதுதான் விவாதத்துக்கு முக்கிய காரணமாகும்.
அதாவது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு முன்னுரை போல விஜய் சேதுபதி பஞ்ச் டயலாக் பேசினார். "உம்முன்னு இருக்கிறதும் தப்பு... கம்முனு இருக்கிறதும் தப்பு.." என்று கூறியிருந்தார். ஆனால் நடிகர் விஜய் ‛சர்க்கார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் "உசுப்பேத்தறவனிடம் உம்முனும் கடுப்பேத்துறவனிடம் கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என்று சொல்லி இருந்தார். இதனால் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் விஜய் சேதுபதியை சிலர் விமர்சனம் செய்ய தொடங்கினர்.
நடிகர் விஜயின் அரசியல் மாநாடு நடந்த அதேநாளில் விஜய் சேதுபதி இப்படி பேசியுள்ளதாக சிலர் ஒன்று சேர்த்து தகவல்களை பரப்ப தொடங்கினர். ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. அவர் இயல்பாக பேசியது தான் நடிகர் விஜயுடன் சேர்த்து விவாதமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு என்பது அதற்கு முந்தைய நாளே முடிந்துவிட்டது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே விஜய் சேதுபதி, நடிகர் விஜயின் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
அதாவது விஜயின் அரசியல் மாநாடு கடந்த 27 ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி நடந்தது. அன்றைய தினம் மதியம் 12.01 மணிக்கு விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்'' என TVK_Maanadu எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் நடிகர் விஜய் சேதுபதி, விஜய் மனதில் வைத்து எதையும் கூறிவிடவில்லை. குறிப்பாக அவரது அரசியல் என்ட்ரிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. இயல்பாக விஜய் சேதுபதி பேசிய டயலாக் தான் தற்போது விஜயின் கருத்துடன் சேர்த்து விவாதமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications