சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுத்த ஆக்ஷன் என்ன? டிஜிபியிடம் விளக்கம் கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மூன்று நாளில் விளக்கம் அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக மேடை பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் சமீபத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியிருந்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் முகம் சுளிக்கும் வகையிலான இந்த பேச்சுக்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது.

எனினும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால், திமுகவில் மீண்டும் கடந்த மே மாதம் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதன்பிறகு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வழக்கம்போல் பேச்சை தொடர்ந்தார். இந்த நிலையில், சென்னையில் நடந்த திமுக கட்சிக் கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
அதாவது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்புவை மிகவும் தரம் தாழ்ந்தும், கண்ணிய குறைவாகவும், கொச்சையாகவும் விமர்சித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. குஷ்புவும் நேற்று கண்கலங்கிய படி ஆவேசமாக பேட்டி அளித்தார். ‛‛பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும்" எனவும் மிக ஆவேசமாக பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நேற்று திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது.
அடுத்த சில மணி நேரங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டப்படி உரிய நடவடிக்கையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications