பாலியல் சீண்டல், அடிதடி, மூச்சுத்திணறல்.. ரகுமான் நிகழ்ச்சியில் அதிர்ச்சி.. ஒரு டிக்கெட் எவ்வளவு?
சென்னை: ஏ.ஆர். ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் முதல் படம் ரோஜா.. இதில் அவர் போட்ட அத்தனை ட்யூன்களும் ஹிட்டடித்தன. அதன் பிறகு ஏ.ஆர். ரகுமான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் இசையமைத்திருந்தார்.

இவர் நிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இசைப்பள்ளியையும் நடத்தி வருகிறார். மேலும் வெளிநாடுகளில் இசைக் கச்சேரியையும் நடத்தி வருகிறார். இத்தனை பிஸியான ரகுமானின் இசை நிகழ்ச்சியை சென்னையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர்.
இது தொடர்பான கோரிக்கை தொடர்ந்து ரகுமானுக்கு வந்தது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் மழை குறுக்கிட்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ரகுமான் அறிவித்தார். ஆனால் அதே டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு வேறு நாளில் இசைக் கச்சேரியை நடத்தலாம் என கூறியிருந்தார்.
இதனால் எப்போது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை காண பெங்களூர் ரசிகர்கள் கூட டிக்கெட் வாங்கியிருந்தனர். ஒரு டிக்கெட்டின் விலை ரூ 3 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொருத்தவரும் குழந்தைகள், குடும்பத்தினருடன் ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சி கிளம்பினர். ஆனால் மாலை 3 மணி முதலே ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்களால் டிக்கெட் இருந்தும் குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. மேலும் டிக்கெட் இல்லாதவர்களும் தள்ளுமுள்ளு செய்து உள்ளே நுழைந்துவிட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கி ஒரு வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் வந்தனர். அவர்கள் டிக்கெட்டை காண்பித்தும் உள்ளே விடவில்லை.
ஏற்கெனவே மைதானம் நிரம்பிவிட்டதால் உள்ளே விட மறுப்பு தெரிவித்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். 20 ஆயிரம் இருக்கைகள் போட்டுவிட்டு 1 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகளை விற்று ஏற்பாட்டாளர்கள் மோசடி செய்ததாக கூறுகிறார்கள். அந்த ஒரு லட்சத்திற்கு மேல டிக்கெட்டே வாங்காதவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலர் உயிர் பிழைத்தால் போதும் என வெளியேறினார்.
குழந்தைகளை வைத்து கொண்டு அவதிப்பட்டனர். மேலும் பெண்களுக்கும் சிலர் பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஒருவர் தனது குடும்பத்திற்கு 4 லட்சம் செலவு செய்து டிக்கெட் எடுத்துள்ளார். அவரால் உள்ளேயே போக முடியவில்லை என குமுறுகிறார். இனி ரகுமான் சென்னையில் நிகழ்ச்சியை நடத்தவே கூடாது என கொந்தளிக்கிறார்கள் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications