"பிரத்தியேக மெஷின்!" நகையை உருக்க செம பிளான்! கடைசி நிமிடத்தில் திடுக் சம்பவம்! வங்கி கொள்ளை பின்னணி
சென்னை: சென்னையில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் போட்டிருந்த மாஸ்டர் பிளான் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

கடந்த வாரம் தான் மாநிலத்தையே அதிரச் செய்யும் வகையில் தலைநகர் சென்னையில் வங்கிக் கொள்ளை அரங்கேறியது. அரும்பாக்கம் 100 அடி ரோட்டில் இயங்கிய தனியார் வங்கி கடந்த 13ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொள்ளை
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் நகைகளைக் கொள்ளை அடித்தது எப்படி எனத் தெரிய வந்தது. முதலில் காவலாளிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கொடுத்த அவர்கள், பின்னர் ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி கழிவறையில் கட்டுப்போட்டு லாக்கரை உடைத்துத் தங்கத்தைக் கொள்ளை அடித்தனர். மொத்தம் 31.7 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

முதற்கட்ட விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து துரிதமாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், வங்கியில் பணிபுரிந்த ஊழியர் முருகன் என்பவரே அவரது நண்பர்களுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. மேலும், கொள்ளைக்கு பின்னர் அவர்கள் பைக் மூலம் தப்பிச் செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவர்கள் கைப்பற்றினர். துரிதமாகச் செயல்பட்ட போலீசார், ஒரே வாரத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் கைப்பற்றிவிட்டனர்.

மாஸ்டர் பிளான்
முருகன் அவரது பள்ளி நண்பர்கள் சூர்யா, பாலாஜி, சந்தோஷ், செந்தில் ஆகியோர் உடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். முதலில் சந்தோஷ், பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கத்தை மீட்டனர். பின்னர் முருகன், சூர்யா, செந்தில் ஆகியோர் கைது செய்து மீதி நகையை மீட்டனர். இந்நிலையில், கொள்ளை அடித்த நகையை வைத்து அவர்கள் போட்டிருந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

நகையை உருக்க திட்டம்
நகையைக் கொள்ளை அடித்த பின்னர் நேரடியாகக் குரோம்பேட்டை சென்ற கொள்ளையர்கள், அங்கு லாட்ஜ் ஒன்றில ரூம் எடுத்துத் தங்கி உள்ளனர். திருடப்பட்ட நகையை அப்படியே வைத்திருந்தால் எளிதாக மாட்டிக் கொள்வோம் என்பதற்காக அவர்கள், நகையை உருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காகக் கோவை நகைக்கடன் உரிமையாளர் ஸ்ரீவஸ்தவா என்பவரின் உதவியுடன் நகையை உருக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி உள்ளனர். மேலும், நகையை உருக்க நிபுணத்துவம் பெற்ற ஒருவரையும் கையோடு அழைத்து வந்துள்ளனர்.

கிளம்பிய புகை
திட்டமிட்டபடி லார்ஜில் வைத்து நகையை உருக்க தொடங்கி உள்ளனர். இருப்பினும், அது சிறிய அளவிலான நகையை மட்டுமே உருக்கக் கூடிய இயந்திரம். அதில் இந்தளவு நகையை ஒரே முறையில் வைத்து உருக்க முடியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நகையை உருக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இருப்பினும், நகையை உருக்கும் போது அதில் இருந்து திடீரென புகை கிளம்பி உள்ளது. இதனால் லார்ஜில் இருப்பவர்கள் சந்தேகப்படுவார்கள் என அஞ்சி, ரூமை காலி செய்து பிரிந்து சென்றுவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

யார் அவர்
நகையை உருக்க இவர்கள் அழைத்து வந்த நபரை போலீசாரால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பின்னரே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தோஷ், நகையுடன் தனது உறவினரான அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜை சந்தித்துள்ளார். கொள்ளை சம்பவத்தை இவர்கள் திட்டமிடும்போது இது இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்கு தெரியாது.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்
இருப்பினும், சந்தோஷ் எடுத்து வந்த நகையைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜுக்கு அது வங்கிக் கொள்ளை நகைத்தான் என தெரிந்துவிட்டது. அப்போதும் கூட சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்காமல் நகையை வாங்கி பதுக்கியது தெரிய வந்தது. இதன் பின்னரே அமல்ராஜ் வீட்டில் சோதனை செய்யப்பட்டு நகைகள் கண்டறியப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் மட்டும் போலீசார் துரிதமாகச் செயல்படாமல் இருந்து இருந்தால், நகைகளை உருக்கி, விற்று கொள்ளையர்கள் தப்பி இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications