என் தற்கொலைக்கு இதுதான் காரணம்.. திருமலா பால் நிறுவன மேலாளரின் கடிதம் சிக்கியது.. போலீஸ் விளக்கம்
சென்னை: சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் ரூ. 45 கோடி மோசடி செய்ததாக நிறுவன மேலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து மேலாளர் பால் நிறுவனத்துக்கும், தனது சகோதரிக்கும் அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதம் சிக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டு தகவல் வெளியாகி வரும் நிலையில், அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி (37). இவர் சென்னை புழலை அடுத்த கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தார். நவீன் பொல்லினேனி சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும்போது ரூ. 44.5 கோடியை நவீன் நிறுவனத்தில் இருந்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புகார் அளித்த நிறுவனம்
இதுகுறித்து, திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் அளித்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் நவீனை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அப்போது நவீன் நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்நிலையில், போலீஸாருக்கு அச்சப்பட்டு, புழல் பகுதியில் புதிதாக கட்டப்படவிருந்த வளாகத்தில் உள்ள குடிசை வீட்டில் தூக்கிட்டு நவீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மின்னஞ்சல் அனுப்பிய நவீன்
இச்சம்பவம் குறித்து, புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நவீன் திருமலா பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தன்னுடைய சகோதரிக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நரேஷ், முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என்று கூறினர். இதனால், பயந்துபோய் நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.
எதிர்காலத்தை நினைத்து
போலீஸில் புகார் அளிக்க அவர்கள் முடிவெடுத்ததால் எனது எதிர்காலத்தை நினைத்து பயந்து இந்த முடிவுக்கு வந்தேன். எனது தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். கையாடல் குறித்து வெளியே தெரிந்தவுடனேயே நான் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிடுவதாகக் கூறி, முதல்கட்டமாக ஜூன் 26 ஆம் தேதி ரூ. 5 கோடியை திருப்பிச் செலுத்தினேன். மூன்று மாதத்தில் மீதமுள்ள தொகையை செலுத்தி விடுகிறேன் என்று உறுதியளித்தேன்.
வேறு யாருக்கும் தொடர்பில்லை
இந்த மோசடி சம்பவத்தில் எனக்கு மட்டுமே தொடர்புள்ளது. வேறு யாருக்கும் தொடர்பில்லை. பணம் கைமாறப்பட்ட நான்கு வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்த பணமும் எனக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. வேறு யாரும் இந்த மோசடியில் பயன்பெறவில்லை. இந்த மோசடி குறித்து பால் நிறுவனத்தின் அதிகாரிகள் புகார் எதுவும் அளிக்க வேண்டாம்.
பாஸ்போர்ட், ஆவணம்
பால் நிறுவனம் எனது பாஸ்போர்ட், சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துள்ளது. ஆனால், அதற்கான அத்தாட்சி கூட என்னிடம் கொடுக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று நான் கூறியும் அதனை ஏற்காமல் பால் நிறுவனம் தொடர்ந்து எனக்கு டார்ச்சர் கொடுத்து வந்தது. எனது சடலத்தில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சாம்ராஜ்யமே அசையும்
உங்களால் எதையும் தற்போது மீட்க முடியாது. அலுவலகத்தின் வாசலில் என் சடலத்தை வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனது இறப்பு உங்கள் சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிறுவன அதிகாரிகள், குடும்பத்தினரின் பெயரை குறிப்பிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார்.
பாண்டியராஜனுக்கு என்ன சம்பந்தம்
இதற்கிடையே நவீன் தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துணை ஆணையர் பாண்டியராஜனை சம்மந்தப்படுத்தி பல்வேறு சர்ச்சை பதிவுகள் பரவி வருகின்றன. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல இணை ஆணையர் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் வெளியிட்ட அறிக்கை
இதுகுறித்து சென்னை பெருநகர போலீஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நவீன் பொலினேனி கடந்த மாதம் 25ம் தேதி அளித்த புகார் தொடர்பாக விசாரணை ஏதும் துவங்கப்படவில்லை. நவீன், 9ம் தேதி மாலை தனது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில் காவல் துறையினரைப் பற்றி எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.
அறிக்கை அளிக்க உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் சிலர் அவரது தற்கொலையில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனரை தொடர்வுபடுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பெருநகர மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டல் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications