போனவாட்டி லேடியா மோடியா.. இந்த வாட்டி.. என்ன கோஷத்தை எதிர்பார்க்கலாம்??
சென்னை: 2014 –ம் ஆண்டு இந்தியா சந்தித்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி முற்று முழுவதுமாக மக்களின் வெறுப்பை சந்தித்திருந்த சூழலில் குஜராத் முதல்வர் மோடி பிரதமர் வேட்பாளாராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டார்.
அதே வேளையில் குஜராத்தை விட பல மடங்கு, பல துறைகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றிருந்ததால் தமிழகத்தில் இருந்தும் ஜெயலலிதா ஏன் பிரதமராகக் கூடாது என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஜெயலலிதாவுக்கும் கூட அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக கூறுவார்கள். அப்படிப் பட்ட நிலையில் இந்தியா தேர்தலை சந்தித்தபோதுதான் தமிழகத்தில் அதிமுக தனித்து தேர்தல் களம் கண்டது.
பிரதான எதிர்கட்சியான திமுகவும் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கூறி காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு தனித்தே தேர்தல் களம் கண்டது. அந்த நிலையில் ஜெயலலிதா முழங்கினார் அந்த மோடியா இல்லை இந்த லேடியா என்று, பலத்த வரவேற்பை பெற்றது இந்த கோஷம். தேர்தலிலும் பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா.

ஆளுக்கு ஒரு தொகுதி
தமிழகத்தில் ஒரேயொரு தொகுதியில் பாஜக வென்றது. கூட்டணிக் கட்சியான பாமக தர்மபுரியில் வென்றது. அம்மா வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று கூறி வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இப்போது வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடியா மோடியா என்ற கோஷத்தை முன்னெடுக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்வி இப்போது அதிமுக தொண்டர்கள் முதல் அனைவரிடமும் உள்ளது.

நெருங்கி நெருங்கி வந்தும்
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் அதிமுகவை நெருங்கி, நெருங்கி வந்தாலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவுக்கு இன்னமும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. மாறாக அதிமுக தலைவர்கள் மோடியையும் பாஜகவையும் எதிர்த்து பல தளங்களில் முழங்கி வருகிறார்கள். குறிப்பாக தம்பிதுரை, அன்வர் ராஜா, கடம்பூர் ராஜு, பொன்னையன் போன்றோருக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் கடுமையான எதிர்ப்பு நம் மீதும் எதிரொலிக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆகவே அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கூட பாதிக்கப் படலாம் என்பது அவர்களின் தேர்தல் கணக்கு. ஆகவேதான் பாஜகவை தூக்கி சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா என்று கேள்வி கேட்டு பாஜகவை நோகடிக்கிறார் தம்பிதுரை.

ரகசியமாக பேச்சு
இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் ரகசியமாக நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். அவர் பாஜகவுடன் கூட்டணி இருக்கிறது என்றோ இல்லை என்றோ அறுதியிட்டு கூறவில்லை. அதே வேளையில் எங்களுடன் நட்பாக உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறியுள்ளார். தேசிய கட்சிகளில் காங்கிரஸ் திமுகவோடு போய்விட்ட நிலையில், கம்யூனிஸ்ட்களும் திமுக கூட்டணியையே ஆதரிக்கின்றனர் என்பதுவும் தெளிவாகிவிட்ட நிலையில் இருக்கின்ற ஒரே தேசிய கட்சி பாஜக மட்டுமே.

என்ன கோஷமோ
ஆக அவர்களுடன்தான் கூட்டணியா என்றால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவே இப்போதைய சூழல்கள் கூறுகின்றன. அப்படியென்றால் தனித்து நின்று ஜெயலலிதா போல எடப்பாடியா மோடியா என்ற முழக்கத்தை முன் வைப்பார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஜெயலலிதா இந்த முழக்கத்தை முன்வைத்தபோது இருந்த சூழலை கவனிக்க வேண்டும். அப்போது ஸ்டாலின் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பாஜகவின் தேர்தல் அறிக்கையும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான், கொள்கை அளவில் இருவரும் ஒன்றுதான் என்றெல்லாம் கூறிவந்தார்.

செம ஹிட்
காரணம் என்னவெனில் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் அரசியல் ரீதியாக நல்ல நட்பு இருந்தது ஒரு காரணம். இதனால் சிறுபான்மை இன மக்களான கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் தங்களை விட்டு போய்விடுமோ என்று எண்ணியே ஜெயலலிதா அப்படி ஒரு முழக்கத்தை முன்வைத்தார். அதோடு ஜெயலலிதாவுக்கென்று அரசியலிலும் மக்கள் மனதிலும் ஒரு பெரிய தலைவர் என்ற இமேஜ் இருந்தது. அதனால் அவரால் அப்படி ஒரு முழக்கத்தை முன் வைக்க முடிந்தது. மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். கூடவே காங்கிரசும் திமுகவும் தனித்தனியே தேர்தலை சந்தித்தது அதனால் இந்த முழக்கத்தை முன் வைத்ததால் ஜெயலலிதாவுக்கு வாக்குகளை பெறுவதிலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை

இப்போதைய நிலைமை வேறு
ஆனால் இப்போதிருக்கும் சூழலே வேறு. காங்கிரசும் திமுகவும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. பலம் வாய்ந்த கூட்டணியாக அது உள்ளது. அதிமுக மாநில கட்சிகளோடு கூட்டணி வைக்க முயற்சித்தாலும் தேமுதிகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி இப்போது 2.5% மட்டும்தான், அதுபோல பாமகவுக்கு 5.5 % தான். இந்த பலத்தை வைத்துக் கொண்டு அதிமுக எடப்பாடியா, மோடியா என்ற கோஷத்தை முன்வைக்காது,

ஆட்சியமைக்க உறுதி
பாஜகவும் இப்போது தனித்து நிற்கலாம் என்ற எண்ணத்தில் வந்துவிட்டதாகவே தெரிகிறது. நிர்மலா சீதாராமன் கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது தனித்தும் நிற்கலாம் என்றே கூறியுள்ளார் அதுபோல மோடியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றவில்லை. பாஜகவின் ஒரே குறிக்கோள் அடுத்து மீண்டும் ஆட்சியமைப்பதே அப்படி இருக்கும்போது, இப்போது அதிமுகவுடன் சேர்ந்து நின்றால் என்னவாகும் நிலைமை என்பது அவர்களுக்கும் தெரியும் ஆகவே இணைந்து நின்று தேர்தலை சந்தித்து தோல்வியடைவதை விட தனித்து நின்று தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் ஆதரவை பெறுவதே அவர்களின் எண்ணமாகவும் இருக்கும். அதிமுகவும் அதுவே தங்களுக்கும் சிறந்தது என்று எண்ணலாம்.

மோடியா எடப்பாடியா
அதிமுகவுக்குள் இப்போது இரண்டு வேறுபட்ட கருத்துகள் இருக்கும் நிலையில் பாஜகவோடு கூட்டணி வைப்பதன் மூலம் கட்சிக்குள் தேவையில்லாத உரசல்களையும் தவிர்க்கலாம் என்பதோடு, தேர்தலுக்கு பிந்தைய சூழலில் ஆதரவளிக்கலாம் என்ற மனநிலையிலேயே அதிமுக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதோடு மோடியா லேடியா என்று ஜெயலலிதா கேட்டது போல எடப்பாடியா மோடியா என்று கேட்டு அதிமுக இந்துத்துவா வாக்குகளை இழக்க நினைக்காது இது அனைத்தையும் தாண்டி ஒரு வேளை இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்கப்பா என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் சூரி கூறுவது போல அதிமுக தலைமையின் மைன்ட் வாய்ஸ் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது கற்பனைத் திறன், அந்தப் பெருமை எல்லாம் வாசகர்களாகிய உங்களையே சாரும்.












Click it and Unblock the Notifications