ரகசியம்.. டெல்லி போனப்பவே தெரியும்! ஆளுநர் ரவிக்கு எதிராக ரெடியாகும் அறிவாலயம்? அடுத்த முக்கிய மூவ்?
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுனர் ஆர். என் ரவி கொடுக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக புறக்கணித்துள்ளது. இந்த புறக்கணிப்பை தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பல முக்கிய முடிவுகளை திமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பியதில் இருந்து இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நீட் மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இப்போது இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.

டெல்லி போன போதே முற்றியது
இந்த விவகாரம் எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் டெல்லி போனார். டெல்லி போன முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவி குறித்து நேரடியாக பிரதமர் மோடியிடம் பேசி இருக்கிறார். நீட் தேர்வு விலக்கு மசோதா ஏற்கப்படாமல் உள்ளது. இரண்டாவது முறை நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பது விதி. ஆனால் இன்னும் ஆளுநர் ஏற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் புகார் அளித்து இருக்கிறார்.

அவசரம்
உடனே இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தான் அளித்த 13 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாக இந்த கோரிக்கையையும் வைத்து இருக்கிறார். அதன்பின் தமிழ்நாடு வந்து பின் கேரளாவில் சிபிஎம் மீட்டிங்கில் பேசிய போதும் முதல்வர் ஸ்டாலின், 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மறுத்து வருகிறார் ஆளுநர் ஆர். என் ரவி. தனது ஜனநாயக கடமையை செய்யாமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார்.

கோபம்
ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக அவர் செயல்படுகிறார். மொத்தம் 11 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நிறைவேற்றும் மசோதாவை நிறுத்தி வைக்க அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை கூட மீறி ஒன்றிய அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.

ஆளுநரும் டெல்லி
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஆளுநர் ரவி அவசர அவசரமாக டெல்லி சென்றார். இவர் தனிப்பட்ட விஷ்யங்களுக்காக டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் இவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவரின் டெல்லி பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் பற்றிய புகைப்படங்கள் எதுவும் வரவில்லை. அவரின் பயணமே ஒரு ரகசியமான பயணமாகத்தான் இருந்தது. அவர் டெல்லி போனப்பவே இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்க போவது தெரியும் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

அதிகாரபூர்வ மீட்டிங் நடக்கவில்லை
இது தனிப்பட்ட பர்சனல் பயணம் என்று கூறப்பட்டது. இதனால் எங்கும் அதிகாரபூர்வ மீட்டிங் நடக்கவில்லை. அவர் டெல்லியில் இருந்து திரும்பி வந்த சில நாட்களில்தான் தற்போது ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்பதாக தமிழ்நாடு அரசு என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று ஆளுநருடனான சந்திப்பு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.

இப்போது எதிர்ப்பு
ஆனால் இது தொடக்கம்தான் என்றும் கூறுகிறார்கள். தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் ஆளுநர்களுக்கு எதிராக மாநில முதல்வர்கள் கடுமையான நடவடிக்கைகளை, எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மோதல் இருந்தாலும், அது இன்று காலை வரை பெரிதாகாமல் இருந்தது. இன்று பெரிதாகிவிட்டது. இனி வரும் நாட்களில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகளை ஆளும் தரப்பு மேற்கொள்ளும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

அறிவாலய வட்டாரம்
ஆளுநர் பதவியை மதிக்கிறோம். அவரின் பதவியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவரின் செயல்பாடுகளை சட்டத்திற்கு உட்பட்டு திமுக எதிர்க்கும். அதன் ஒரு கட்டமாகவே அவரை திரும்ப பெற சொல்லி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இனி வரும் நாட்களில் வேறு விதங்களில் சட்டத்திற்கு உட்பட்டு எதிர்ப்புகளை இங்கேயும், டெல்லியும் பதிவு செய்வோம். இதற்காக தயாராகி வருகிறோம். என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications