ஸ்டெர்லைட் ஆலை.. என்ன பண்ணபோறீங்க? இது ஸ்டாலின்.. மறுசீராய்வு மனு.. இது அமைச்சர் தங்கமணி
Recommended Video
சென்னை:ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற முடிவுக்கு, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மற்றும் ஆலையை திறக்க தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களிடையேயும், தூத்துக்குடி மக்களிடையேயும் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டசபையில் அவர் பேசியதாவது:
முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது என்பது சமூக நீதிக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற முடிவுக்கு, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வுமனு தாக்கல் செய்யப்படும். ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று தங்கமணி கூறினார்.