அந்த பெல்டிற்கு மட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்! புயலாக உருவெடுக்குமா "சக்கரம்"
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்.. மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் கனமழை பெய்யவில்லை. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது.
முதலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது. அதை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது.
வலிமை இழக்கும் காற்றழுத்த தாழ்வு..4 மாவட்டங்களில் கனமழை இருக்கு.. உஷார் மக்களே!
தாழ்வு மண்டலம்
கடந்த வாரத்திற்கு முன் தொடங்கிய தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால் தாழ்வு மண்டலமாக மாறிய மறுநாளே வறண்ட காற்று காரணமாக இது வேகம் இழக்க தொடங்கியது. மிக மிக மெதுவாக நகர்ந்தது. சென்னை வடக்கு பகுதியை நோக்கி இந்த தாழ்வு மண்டலம் வந்தது. ஆனால் சென்னையை நெருங்கும் போது இது மேலும் வலிமை குறைந்தது. சென்னைக்கு அருகில் 150 கிமீ தொலைவில் இருக்கும் போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தாழ்வு மண்டலத்தில் இருந்து வலிமை குறைந்தது. இதனால் சென்னைக்கு பெய்ய வேண்டிய பெரும் மழையும் இல்லாமல் போனது. இதன் காரணமாக மழையில் இருந்து சென்னை தப்பித்தது.
மழை இல்லை
இதனால் சென்னைக்கு எதிர்பார்த்த அளவிற்கு கனமழை இல்லை. சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்தது. ஆனால் இந்த தாழ்வு மண்டலம் விட்டுவிட்டு சென்ற குளிர்ந்த காற்று காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளிலும் இரண்டு நாட்களாக லேசான மழை பெய்தது. ஆனாலும் அடித்து வெளுக்கும் அளவிற்கு எங்கும் கனமழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மட்டுமே மழை பெய்தது. நேற்று திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு நேரத்திலும், அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. சென்னை வானிலை மையத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரும் 1ம் தேதி வரை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாட்டுல இன்று மழை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டு உள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும். கிழக்கு காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை டிசம்பர் பாதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று தமிழ்நாட்டில் கிழக்கு பெல்ட் முழுக்க லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் அறிக்கையில் இருக்கும் கரூரிலும் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை
இன்று தென் தமிழ்நாட்டில் இருக்கும் நெல்லை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், குமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த மழை முழுக்க எல்லா இடங்களிலும் பெய்யாது. ஒரு சில இடங்களில் மட்டும்தான் பெய்யும். ஒரு சில இடங்களில் பெய்யாது. டிசம்பர் 2ம் வாரம் புதிய சக்கரம் உருவாக வாய்ப்பு உள்ளது.
அப்டேட் என்ன?
இந்தோ - சீனா கடல் பகுதியில் இருந்து இந்த சக்கரம் ஒன்றாக நகர வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2ம் வாரம் இந்த சக்கரம் உருவாக வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த சக்கரம் தாழ்வான உயரத்தில் நகர வாய்ப்புகள் உள்ளன. இலங்கைக்கு மேலே தாழ்வாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக போக போக அப்டேட் வரும் வாய்ப்புகள் உள்ளன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் வெளியிட்டு உள்ளார்.