18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்? ஆட்சி கவிழுமா? தப்புமா? தடுமாறுமா?
Recommended Video
சென்னை: தகுதிநீக்க தீர்ப்பு வெளியானால் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா இல்லாவிட்டால் ஆட்களை இழுக்கும் வேலைகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனிடையே கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் 18 பேரும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் ஓரிரு நாளில் 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பளிக்கவுள்ளார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கு.. அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை
நம்பிக்கையில்
தகுதி நீக்க வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் குதூகலமாக தங்கியுள்ளனர். அது போல் தகுதி நீக்க வழக்கு செல்லும் என்றே தீர்ப்பு வரும் என முதல்வர் எடப்பாடி தரப்பும் நம்பிக்கையில் உள்ளது.
பலம்
இந்த ஒற்றை தீர்ப்பு அதிமுக அரசு மற்றும் 18 பேரின் தலையெழுத்தை மாற்ற போகும் தீர்ப்பாகும். எனவே தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால் பேரவையின் பலம் 214 -ஆக இருக்கும்.
தகுதி நீக்கம் செல்லாது
ஆட்சியமைக்க 108 இருந்தாலே போதுமானது. இதனால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மறு தேர்தல் முடிவு வெளிவந்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். அதுபோல் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால் பேரவையின் பலம் 232 ஆக உயரும் (214+18).
காலியாக உள்ள தொகுதிகள்
ஆட்சியமைக்க 117 உறுப்பினர்கள் தேவை. எனவே அதிமுகவுக்கு யாரும் ஆதரவு அளிக்காவிட்டால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். சட்டசபையில் அதிமுகவுக்கு 109 இடங்களும், திமுக கூட்டணிக்கு 97 இடங்களும் சபாநாயகர் ஒருவர், அமமுகவுக்கு ஒரு இடமும், தோழமை கட்சிகளுக்கு 3 இடங்களும் உள்ளன. மேலும் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ளனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன.
சபாநாயகர்
திமுக கூட்டணியும் டிடிவி தினகரனும் அதிமுக அரசுக்கு ஆதரவு தரமாட்டார்கள். அதுபோல் தோழமை கட்சிகளில் அரசு மீது கருணாஸ் கடும் கோபத்தில் உள்ளதால் அவரது ஆதரவும் சந்தேகம்தான். தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் ரத்தினசபாபதி, எஸ்.ஆர். பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் ஆதரவு பெற்றாலும் சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 115 பேரே உள்ளனர்.
தகுதிநீக்க வழக்கு
எனவே ஆட்சி அமைக்க அதிமுக அரசுக்கு இரு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக இவர்கள் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினாலும் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் திமுக கூட்டணி உறுப்பினர்களையும் மடக்க அதிகமாகவே வாய்ப்புள்ளது. எனவே தகுதி நீக்க வழக்கு செல்லும் விதத்தை வைத்தே எதையும் சொல்ல முடியும்.