"மேல்முறையீடு செஞ்சாலும் கஷ்டம் தான்.." ரவீந்திரநாத் வழக்கில் அடுத்து என்ன! முன்னாள் நீதிபதி பரபர
சென்னை: தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேல்முறையீடு செய்தாலும் இதில் பெரிய பலன் கிடைக்காது என ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளில் 38இல் திமுக கூட்டணி வென்றது. இருப்பினும், அப்போது தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஆர், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தினார். இருப்பினும், ஓபிஆர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு: இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இதில் பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக ரவீந்திரநாத்தும் நேரில் ஆஜராகியிருந்தார். இருப்பினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். இதனால் அவர் எம்பி பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டது.
இருப்பினும் ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்ய ஏதுவாக நீதிமன்ற தீர்ப்பு 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே மேல்முறையீடு செய்தால் என்ன நடக்கும் ஓபிஆருக்கு சாதமாகத் தீர்ப்பு வருமா என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கும்: இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எம்பி தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவித்தாலும் நீதிமன்றமே தேர்தல் முடிவை நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்கி கால அவகாசம் கொடுத்துள்ளனர். மேல்முறையீட்டில் வழக்கை நிறுத்தி வைக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், 30 நாட்கள் அவர் எம்பியாகவே இருக்கிறார்.
பொதுவாக கீழமை நீதிமன்றங்களில் தான் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும். மேல்முறையீடு செய்யும் போது ஆவணங்களை மட்டுமே ஆய்வு செய்வார்கள். கீழமை நீதிமன்றத்தில் நடந்த விசாரணை சரியாக நடந்துள்ளதா என மட்டுமே பார்ப்பார்கள். சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதாவது இந்த உத்தரவு நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு..
வாய்ப்பு குறைவு: எனவே, கீழமை நீதிமன்றத்தில் அனைத்து சாட்சியங்களிடமும் உரிய முறையில் விசாரணை நடத்தியுள்ளனர். ஓபி ரவீந்திரநாத்திடமும் விசாரித்துள்ளனர். இருப்பினும், அவர் உரிய விளக்கம் இல்லை எனத் தெரிகிறது. வாக்குகளுக்குப் பணம் கொடுத்தற்கான ஆதாரங்கள் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மேல்முறையீட்டிலும் கூட தீர்ப்பிற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான மற்ற வழக்குகளைப் போல இல்லாமல் இந்த வழக்கில் விசாரணை சீக்கிரமாக நடத்தி முடித்துள்ளனர். உதாரணத்திற்குச் சிதம்பரத்தின் மீதான வழக்கை எடுத்துக் கொள்ளலாம். அவரது பதவிக்காலமே முடிந்த பிறகே அதில் தீர்ப்பு வந்தது. பெரும்பாலான நேரங்களில் பதவிக்காலம் முடிந்த பிறகே தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த முறை சீக்கிரமாகத் தீர்ப்பு வந்துள்ளது ஆச்சரியமாகவே இருக்கிறது.
இதில் பல சாட்சியங்களை விசாரித்துள்ளனர். அதேபோல ரவிந்திர நாத்தையும் விசாரித்துள்ளனர். இதை எல்லாம் வைத்தே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பைத் தவறு எனச் சொல்ல வலுவான காரணம் இல்லை என்றால் மேல்முறையீடு செய்தாலும் கூட தீர்ப்பிற்குத் தடை கிடைப்பது கடினம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications