"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது".. தமிழக வானிலையில் நடக்கும் மெகா மாற்றம்.. வல்லுனர்கள் வார்னிங்!
சென்னை: தமிழ்நாடு வானிலையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் சென்னை ரெயின்ஸ் (chennairains.com) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று வழங்கி இருந்த மிக கனமழைக்கான எச்சரிக்கையை வாபஸ் வாங்கியது. ஆனால் நாளையில் இருந்து தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வானிலை
தமிழ்நாடு வானிலையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் சென்னை ரெயின்ஸ் (chennairains.com) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பக்கம் பல வானிலை மாடல்கள் மூலம் பலவகையான கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இன்னொரு பக்கம் வானிலையில் இயற்கை தனக்கே உரிய திசையில் எப்போதும் போல சென்று கொண்டு இருக்கிறது. இதனால் மனிதர்கள் விரும்பும்படி, அவர்கள் எதிர்பார்க்கும்படி வானிலை மாற்றங்கள் இருக்காது. விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்த நேரங்களில் மழை பெய்யாமல் போய் இருக்கிறது. மழையே வேண்டாம் என்று நினைக்கும் நாட்களில் கனமழை பெய்து இருக்கிறது.
கீதாசரத்தில் வரும் வாசகம்தான் தற்போதைய சூழ்நிலைக்கு மிக பொருத்தமாக இருக்கும்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
என்ற வாசகம்தான் இந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கும்.

பொறுமை
நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் நமக்கு உணர்த்தி உள்ளது. கடந்த 48 மணி நேரமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு எதிரான சூழ்நிலையே நிலவி வந்தது. ஒரு பக்கம் வறண்ட காற்று வீசிக்கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் காற்றழுத்த தாழ்வு பகுதியை வீழ்த்தும் வகையில் அருகிலேயே பல சுழற்சிகள் உருவாகிக்கொண்டு இருந்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி, பெரும் மோதலுக்கு பின்பாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு உறுதியான நிலையை அடைந்து உள்ளது. இரவு நேரத்தில் கடலின் வெப்பமான மேல் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களும் கூட இந்த தாழ்வு பகுதி உறுதியான ஒரு நிலையை அடைவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலத்திற்கான குணாதிசியங்களை கொண்டு உள்ளது.

வானிலை எப்படி இருக்கும்?
இதன் மத்தியில் Central Dense Overcast (CDO) எனப்படும் அடர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த தாழ்வு மண்டலத்திற்கான அறிகுறி ஆகும். சாட்டிலைட் படங்கள் இது வலுவாகி வருவதை உறுதி செய்துள்ளது. மொத்தமாக காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு எதிரான சூழ்நிலையே நிலவி வருகிறது. இங்கே நிலவும் வறண்ட காற்று காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு எதிராகவே உள்ளது. என்றாலும் இது தாழ்வு மண்டலமாக மாறும் ரிஸ்க் இருக்கிறது. அதை நாம் மறந்துவிட கூடாது. இதன் முதல் செட் மழை இன்று இரவு அல்லது நாளை காலை கடலோர மாவட்டங்களில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

கடலோர மாவட்டங்கள்
கடலோர மாவட்டங்களில் தமிழ்நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்தே வறண்ட வானிலைதான் காணப்படுகிறது. இந்த நாட்களில் காற்றின் ஈரப்பதம் வேறு வேறாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வடக்கு மாவட்டங்களில் வறண்ட காற்றும், மேற்கு மாவட்டங்களில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதன் அர்த்தம் வரும் நாட்களில் ஒரு சில இடங்களில் மிக அதிக மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களின் மேலே இருக்கும் வறண்ட காற்று, ஈரமான மேற்கு காற்று மூலம் தள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளன.

மாற்றம்
அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. சில வானிலை மாடல்கள் நமக்கு காட்டும் டேட்டாவை வைத்து பார்த்தால், இந்த ரிஸ்க்கை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை, செவ்வாய் கிழமை கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நெருங்க தொடங்கிய பின் கனமழை பெய்யும். மரக்காணம் - நெல்லூர் பெல்டில் இதனால கனமழை பெய்யும். அதேபோல் மரக்காணம் - டெல்டா பெல்டும் இதனால் கவனமாக இருக்க வேண்டும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications