"கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் மிக பெரிய விஷயத்தை திட்டமிட்டுள்ளோம்!” சேகர்பாபு சொன்ன மேட்டர்
சென்னை: கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோயம்பேட்டில் தான் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் இங்கிருந்து பயணித்து வந்தனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

இதையடுத்து புறநகர் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல தாமதங்களுக்குப் பிறகு இந்த பேருந்து நிலையம் இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு: படிப்படியாக மிக விரைவில் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடம் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் எழும். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை சுமார் 30% பேருந்துகள் அடுத்த ஓராண்டிற்கு அங்கிருந்து இயங்கும் நிலை இருக்கிறது. பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் சூழலே இருக்கிறது. அது முடிந்த பிறகு முதல்வர் வழிகாட்டுதல்படி கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் மிகப்பெரிய விஷயத்தைத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அடிப்படை வேலைகளைத் தொடங்க உள்ளோம்.
மிகப் பெரிய விஷயம்: மக்களுக்கு உதவவும் நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணவும் சிஎம்டிஏ பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதையொட்டி உள்ள 16 ஏக்கர் அளவில் நிலம் சென்னை பெருநகர வளர்ச்சி குமுழுத்திற்கு சொந்தமானதுதான். அதை எல்லாம் ஒருங்கிணைத்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 86 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 6.50 லட்சம் சதுரடியில் கட்டுமானம் நடந்துள்ளது. இதில் பல தேவைகள் இருந்தாலும் கடந்த ஆட்சியாளர்கள் இதில் உரிய முறையில் திட்டமிடவில்லை. இந்த ஆட்சிக்கு வந்த பிறகே சரியாகத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தோம்.
பிரச்சனைகள் சரி செய்துள்ளோம்: முன்பு சிறு மழைக்கே அங்கே மழை நீர் தேங்கும் சூழல் இருந்தது. அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்தோம். இதற்காக ரூ. 13 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்துள்ளோம். நிரந்தரமாக மழைநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ரயில் பாதை அருகே கட்டுமானம் செய்ய வேண்டும்.
இது குறித்து தென்னக ரயில்வேயிடம் கேட்ட போது, அந்த கட்டுமானத்திற்கு 14 கோடி செலவாகும் என்றார்கள். மத்திய மாநில அரசுகள் இந்த செலவை 50:50 எனப் பிரித்துச் செலவிட்டுக் கட்ட திட்டமிட்டுள்ளோம். மேலும், பயணிகள் வருகை அதிகரிக்கும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கே ரூ.13 கோடி செலவில் காவல் நிலையத்தைக் கட்ட உள்ளோம். மேலும், பூங்காவையும் அங்கே கட்ட உள்ளோம்.
ரயில் நிலையம்: அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கிட்டு, அங்கே ரயில் நிலையத்தை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். இதற்காக ரூ.20 கோடி ரூபாயை வழங்கியுள்ளோம். மொத்தம் 140 கோடி ரூபாய் செலவில் அங்கே திட்டங்களை உருவாக்கவுள்ளோம். அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்துத் திட்டமிட்டுள்ளோம்.
புது வீடு கட்டி குடியேறினால் கூட சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். அதுபோலத் தான் இதுவும்.. மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது தான் தேவைகள் என்ன என்பதை முழுமையாகக் கண்டறிய முடிகிறது. இந்த சிறு சிறு பிரச்சினைகளை வைத்து யாரும் பீதியைக் கிளப்ப வேண்டாம். இது சர்வதேச தரத்திலான பேருந்து நிலையமாக இருக்கிறது. குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள். அதைச் சரி செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications