எல்.முருகன் ஏன் அப்படி சொன்னார்.. வலுவாக பேசல.. உறுதியாவும் சொல்லல... அப்டின்னா பாஜகவும், அமமுகவும்?
சசிகலா விவகாரத்தில் பாஜக என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை
சென்னை: எல்.முருகன் ஏன் அப்படி அன்றைக்கு சொன்னார்? சசிகலா விவகாரத்தில் பாஜக என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்ற குழப்பமும், சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான கட்சி.. ஊழல்வாதிகள் யார் யார் என்று லிஸ்ட் எடுத்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே தள்ளி வருகிறது.. அந்த வகையில் ப.சிதம்பரம் முதல் டிடிவி தினகரன் வரை பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இப்போது சசிகலா விஷயத்தில் சற்று இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.. சுருக்கமாக சொல்ல போனால், அமமுக, அதிமுகவுக்கு நடுவில் அம்பயராக உருவெடுத்துள்ளது... இந்த கட்சிகளை இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. அதற்கு காரணம் திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும் என்பதே.
அமமுக
ஆனால், சசிகலவுடன் அமமுக எத்தகைய உறவில் நேரடியாக உள்ளது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. சசிகலாவின் வளர்ச்சியை பாஜக விரும்பவில்லையா? அல்லது அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் உட்கார வைக்க ஆசைப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
மாற்றம்
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: டிடிவி தினகரன் டெல்லிக்கு போய் வந்ததில் இருந்தே மாற்றம் தென்பட ஆரம்பித்துவிட்டது.. அப்போதிருந்தே அவர் பாஜகவை விமர்சிக்கவில்லை.. இதுதான் அனைவரும் சந்தேகப்பட காரணமாக இருந்த முதல் விஷயம்.. அதற்கு பிறகு சசிகலா சென்னை வருகை நடந்தது..
கேள்வி
சசிகலா - அதிமுக விவகாரம் பற்றி ஒருமுறை சிடி ரவியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது அவர்கள் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக கருத்து சொல்ல முடியாது என்று சொல்லி இருந்தார்.. ஆனால், சசிகலா வருகையை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் வரவேற்புடன் சேர்த்து ஒப்பிட்டு பேசினார்.. அது பொன்.ராதாவின் சொந்த கருத்து என்று சொல்லிவிட முடியாது.. பாஜக தலைவர் ஒருவர் சசிகலாவை உயரத்தில் வைத்து பேசியதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
முருகன்
நேற்று முன்தினம் எல்.முருகனிடம், கூட்டணி குறித்து பேசும்போது, அமமுக தனித்து போட்டியிடுவதாக எங்குமே சொல்லவே இல்லையே என்று பதிலளித்துள்ளார்.. இதுதான் இடிக்கிறது.. இன்னொரு கட்சி எப்படி போட்டியிட்டால் இவர்களுக்கென்ன? அமமுக பற்றி எல்.முருகன் பேச வேண்டிய தேவையே இல்லையே?
அமமுக
இவர்களுக்கு கூட்டணி அதிமுகவுடன்தான், சீட் எண்ணிக்கை, தொகுதி ஒதுக்கீடு இதெல்லாம் அவர்களுடன் பேச வேண்டிய நிலை உள்ளது.. இன்னும் எதுவுமே முடிவாகாத போது, அமமுகவை பற்றி முருகன் பேசயிதன் உள்ளர்த்தம் என்னவென்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அமமுகவுடன் சுட்டணி இல்லை என்றும் இறுதியாக சொல்லவே இல்லை.. அதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று சொல்லி ஒரு பஞ்ச் வைத்துள்ளார்.
ஓபிஎஸ்
ஆனால், தினகரனோ, இன்னொருபக்கம் ஓபிஎஸ்ஸுக்கு நூல் விட்டு கொண்டிருக்கிறார்.. எடப்பாடியோ இந்த செகண்ட் வரை கெத்தாக இருக்கிறார்.. இதற்கு காரணம் பாஜக தரும் தைரியமாகவும் இருக்கலாம்... ஏதோ ஒரு வலிமையான பின்னணி இருப்பதால்தான் எடப்பாடியாரால் இந்த அளவுக்கு துணிச்சலையும், தனித்தன்மையையும் காட்ட முடிகிறது.. அதனால், பாஜகவானது, அமமுக பக்கமும் உள்ளது, அதிமுக பக்கமும் உள்ளது போலதான் தெரிகிறது.. விரைவில் ஒன்றிணைக்கும் வேலையும் வெளிப்படையாகவே நடந்தாலும் நடக்கலாம்" என்றனர்.