"சுப்ரீம் பவர்" எடப்பாடி.. அங்கே ஓபிஆர்.. இங்கே திமுக.. பிரதமரை நெருங்கும் "தலைகள்".. அனலில் கமலாலயம்
சென்னை: பிரதமர் மோடி அடுத்த வாரம் சென்னை வரவுள்ளார்.. இந்நிகழ்வின்போது, திமுக + அதிமுக + பாஜக கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க போகின்றன என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார்... சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அதே நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

மைதானம்
இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் சென்னை வருவதையொட்டி விமான நிலையம், விழா மைதானம் என பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.. இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி, பாஜக - திமுக - அதிமுக என 3 தரப்பிலும் சில முக்கிய செய்திகள் கசிந்து வருகின்றன.. சென்னையில் ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி அன்றைய தினம் இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது. அப்போது கவர்னர் ரவி மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன...

பனிப்போர்
தற்போது அதிமுக- பாஜக இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில், வெளிப்படையான சுமூக சூழல் நிலவவில்லை என்றே தெரிகிறது.. காரணம், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் மூத்த தலைவர் விபி துரைசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என வந்துள்ளார்கள். நேற்றைக்கு ஒரு எம்ஜிஆர் வந்துள்ளார். இப்படி பல எம்ஜிஆர்களை பார்த்து உள்ளோம். தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டால் எம்ஜிஆர் என்றால் நீங்கள் கூட முயற்சி செய்யலாம். நாங்கள் பார்த்தது எல்லாம் ஒரே ஒரு எம்ஜிஆரைத்தான்" என்று எடப்பாடியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

கன்ஃபார்ம்டு
ஆனால், நேற்றைய தினம் ஒரு டிவி சேனல் பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.. ஆக, பிரதமரின் சென்னை வருகையில், கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர்கள் விவாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் ஒவ்வொரு முறையும் பிரதமரை வரவேற்க செல்லும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை, கட்சியின் பொதுச்செயலாளராகி உள்ளதால், பிரதமரை நேரில் சென்று வரவேற்கக்கூடும் என்று தெரிகிறது..

ராமதாஸ்
அதுமட்டுமல்ல, கூட்டணி என்ற முறையிலும் பிரதமரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. பொதுச்செயலாளராக வெற்றி பெற்றதற்கு, அண்ணாமலை, பாரிவேந்தர், என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. கூட்டணியிலிருந்து முறிந்துபோனதாக சொல்லப்பட்ட பாமகவின் டாக்டர் ராமதாஸும், அன்புமணியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.. ஆக, எதிர்க்கட்சி தலைவர் + பொதுச்செயலாளர் + கூட்டணி என்கின்ற வகையில் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து பேசவிருப்பதாக தெரிகிறது.

மேலிடம்
எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேர்ந்தால், நிச்சயம் ஓபிஎஸ் தரப்பும் பிரதமரை சந்திக்க முயலும்.. இந்த நிமிடம் வரை எடப்பாடி + ஓபிஎஸ் என இரு தரப்பையுமே ஒரே தராசில் வைத்து, பாஜக மேலிடம் பார்த்து வருகிறது.. எனவே, ஏர்போர்ட்டில் சந்திப்பதாக இருந்தால், இருவரையுமே சந்திக்கக்கூடும் அல்லது இருவரையுமே தவிர்க்கக்கூடும் என்கிறார்கள்.. இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் நிகழ்ச்சிகளில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் கலந்து கொள்வதாக தெரிகிறது..

சபாஷ் ஓபிஆர்
அந்தவகையில், இந்த நிகழ்ச்சியில், தேனி எம்பி ரவீந்திரநாத் பங்கேற்கவும் நிறையவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்வை ஓரிருமுறை சந்தித்து, தன்னுடைய தொகுதியின் ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கைகளையும் விடாமல் எடுத்து வருபவர் ரவீந்திரநாத்.. போதாக்குறைக்கு பிரதமர், மற்றும் அமித்ஷாவின் நேரடி அபிமானத்தையும் நம்பிக்கையையும் பெற்றவர்.. அந்தவகையில், பிரதமர் வருகையின்போது, ஓபிஆரின் வருகை, எடப்பாடி தரப்பினருக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

வேல்முருகன்
இதனிடையே, ராகுல் காந்தி விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக கொந்தளித்து போயுள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் வருகையின்போது தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, காங்கிரஸ், விசிக, வேல்முருகன், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, இப்படி பலரும் திரண்டு, பிரதமர் வருகையின்போது எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடும் என்கிறார்கள்.. அப்படி எதிர்ப்புக்குரல்களை எழுப்பினால், இந்த கூட்டணி கட்சிகளை திமுக எப்படி சமாளிக்க போகிறது? என தெரியவில்லை..

முளைக்கும் முடிச்சுகள்
ஆளும் கட்சி என்பதால், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.. மாறாக, நாட்டின் பிரதமரை வரவேற்கவே செய்யும் நிலைமையில் திமுக உள்ளது.. அதேசமயம், தன்னுடைய சொந்த கூட்டணி கட்சிகளையும் கட்டுப்படுத்த முடியாது.. எனவே, திமுகவின் செயல்பாடுகள் அன்றைய தினம் எப்படி இருக்க போகிறது என்பதும் எதிர்பார்ப்புதான். ஆக, பிரதமரின் வருகையானது, அதிமுக + திமுக + பாஜக கட்சிகளிடையே மிகுந்த ஆர்வத்தை உண்டு பண்ணி கொண்டிருக்கிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications