ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
சென்னை: அதிமுக கூட்டணியை அப்படியே தன்பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது பாஜக.. இதனால் இந்த முறை பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் அதிமுக களம் காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அனேகமாக ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.. எனவே அதற்குள் கட்சிகள் தொகுதியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது. அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் பாமக பாஜக கூட்டணியில் சேரப்போவது உறுதியாகி உள்ளது.. தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சியுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினர், தங்களது கூட்டணியை இறுதி செய்யும் வகையில் தீவிரமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா இருந்த காலம் வரை, வேட்பாளர்கள் பட்டியலை அதிமுகதான் முதல் ஆளாக வெளியிடும். வேட்பாளர்கள் பட்டியல் வந்த பின்னர் தான், தான் வேட்பாளர் என்பதை கட்சி நிர்வாகி அறியும் நிலை இருக்கும். அதேபோல் தேவைப்பட்டால் வலுவான கூட்டணியை அமைப்பார். இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடவும் தயங்க மாட்டார். கடந்த 2014 தேர்தலில் அதிமுக தனித்தே 39 தொகுதியில் போட்டியிட்டது. அப்போது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. திமுகவின் கோட்டையான சென்னை மண்டலத்தை மொத்தமாக அதிமுக கைப்பற்றியது. அப்படி எல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து விலக்கப்பட்ட நிலையில், அவர்கள் பாஜக பக்கம் கூட்டணியில் உள்ளனர். அதிமுக பாஜக உடன் சேரக்கூடாது என்று உறுதியாக இருந்து, விலகியே இருந்தது. இதனால் அதிமுக 39 தொகுதியிலும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கவும் அதிமுக தயாராகி வருகிறது..
இதற்கிடையில் லோக்சபா தேர்தலையொட்டி, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை, வருகிற 24-ந்தேதி திருச்சியில் தொடங்குகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முதல்கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:-
24-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட வி.வி.டி.சிக்னல் எம்.ஜி.ஆர். திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நெல்லை தொகுதிக்குட்பட்ட வாகையடிமுனை பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் வீரசிகாமணி ரோடு 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
28-ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பாவடி தோப்புதிடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் அரண்மனை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சீபுரம் தொகுதிக்குபட்ட மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் ராஜேந்திரபிரசாத் பிரதான சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட கடலூர் சாலை நீதிமன்ற எதிரில் உள்ள ரோடியர் மைதானம் பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் மைதானம் பொதுக்கூட்டத்திலும், 31-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் பைபாஸ் சாலை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட சின்னக்கடை தெரு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7.30 மணிக்கு நாகை தொகுதிக்குபட்ட திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications