2021 சட்டசபைத் தேர்தல் முடியும் வரை சசிகலா ரிலீஸாக வாய்ப்பே இல்லையாம்.. தள்ளிப் போகுமாம்!
2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு சசிகலா ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்ற தகவல் உலா வருகிறது. தேர்தல் முடியும் வரை சசிகலாவை சிறைக்குள்ளேயே வைத்திருக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சீக்கிரம் விடுதலையாகப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தாலும் 2021 சட்டசபை தேர்தல் முடியும் வரைக்கும் சசிகலா விடுதைலையாக வாய்ப்பேயில்லை என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பிரதான கட்சிகளாக இருப்பவை அதிமுகவும் திமுகவும்தான். தேமுதிக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என எத்தனையோ கட்சிகள் தமிழக அரசியல் களத்தில் இருந்தாலும் அதிமுகவிற்கோ, திமுகவிற்கோதான் ஆட்சியமைக்கும் தகுதியை மக்கள் கொடுக்கின்றனர்.
கடந்த 2016 சட்டசபை தேர்தல் வரை தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய ஆளுமையாக திமுகவில் கருணாநிதியும், அதிமுகவில் ஜெயலலிதாவும் கோலோச்சினார்கள். 2021 சட்டசபை தேர்தலை வழி நடத்த திமுகவில் கருணாநிதி இல்லை. அதிமுகவில் ஜெயலலிதா இல்லை.
நான் ஒரு சாதாரண கூத்தாடி... எனக்கு 2-ம் நம்பர் பிஸினஸ் இல்லை -கருணாஸ் எம்.எல்.ஏ.
ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய ஜெயலலிதா
2011ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஆளும் கட்சி நாற்காலியில் அதிமுக அமர்ந்திருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா சில மாதங்கள் கூட உயிரோடு இருக்கவில்லை டிசம்பர் இறுதியில் மரணமடைந்த பின்னர் பல அரசியல் கலாட்டாக்கள் அரங்கேறின. சமாதியில் தியானம், திடீர் சபதங்கள், சிறைச்சாலைகள் என பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
திருப்பம் நிறைந்த 2017
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது தானே ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த ஆசைப்பட்ட சசிகலா, திடீரென சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறைக்கு போனார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ.பன்னீர் செல்வம் தனது பக்கம் சில எம்எல்ஏக்களை இழுத்தார்.
ஒன்றிணைந்த அதிமுக
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தி வந்த மன்னார்குடி குடும்பத்தை ஒதுக்கி வைத்தார். அதிமுக, இரட்டை யாருக்கு என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே எழுந்த போட்டியில் சில மாதங்கள் அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் முடங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரண்டு தலைமையும் இணைந்து மீண்டும் கட்சி, சின்னத்தை பெற்றனர்.
கட்சி தொடங்கிய டிடிவி தினகரன்
அதிமுகவை தங்கள் பக்கம் முழுவதுமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் கட்சி செயல்படத் தொடங்கியது. ஒதுக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் அமர்ந்து விட்டார். இத்தனை கலாட்டாக்களையும் சிறையில் இருந்தே கவனித்து வருகிறார் சசிகலா.
காய் நகர்த்த முடியுமா
சசிகலா இல்லாமல் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை அதிமுக சந்தித்து விட்டது. இதில் லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. சட்டசபை தேர்தலுக்கு சசிகலா காய் நகர்த்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறைப்பறவையான சசிகலா
பெங்களூரு சிறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவின் விடுதலை பற்றிய பேச்சு பலமுறை எழுந்தது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் ரிலீஸ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் அவர் எப்போது விடுதலையாவார் என்று யாராலும் கூற முடியவில்லை. சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கர்நாடக அரசு, சசிகலா எப்போது விடுதலையாவார் என்ற தகவலை வெளியிட முடியாது என்று கூறிவிட்டது.
சசியின் சிறைக்காலம் எப்போது முடியும்
ஒரு கைதியின் விடுதலை என்பது பல்வேறு சட்ட விதிகளை வைத்துத்தான் கணக்கிட முடியும். சசிகலா போன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகையைச் செலுத்தியது உள்ளிட்டவற்றை வைத்து விடுதலை தேதி மாற்றி அமைக்கப்படும் என்றும் கர்நாடகா அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சசிகலா விடுதலையாக சாத்தியமே இல்லை என்று தெரிகிறது.
சசிகலா வெளியே வந்தால்
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று ஏற்கனவே சுப்ரமணியசுவாமி கூறி பலருக்கும் கிலி எற்படுத்தியிருக்கிறார். சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு அவரால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது ஆனாலும் கட்சியின் உள் விவகாரங்களில் அதிகமாக தலையிட முடியும் என்பதை அனைவராலும் மறுக்க முடியது.
மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம்
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுகவில் சசிகலா தொடர்புடைய மன்னார்குடி குடும்ப உறவுகள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். 2016 சட்டசபை தேர்தல்வரைக்கும் சீட் ஒதுக்கீடு செய்வதில் முக்கிய பங்காற்றியவர் சசிகலாதான். அவரின் தயவால் சீல் வாங்கி, எம்எல்ஏ, அமைச்சர் என உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன் சசிகலா விடுதலை செய்யப்பட்டால் கட்சியை மீண்டும் கைப்பற்றலாம், சீட் ஒதுக்கீடு செய்வதில் தலையிடலாம் என்ற எண்ணம் பலருக்கும் எழாமல் இல்லை. எனவே, சசிகலா சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியே வர வாய்ப்பே இல்லை என்றுதான் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.