இளைய மகன் பிறந்ததும் சவுக்கத் அலி என பெயர் வைத்த விஜயகாந்த்! எதிர்ப்பு தெரிவித்த உற்றார் உறவினர்!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது இளைய மகன் பிறந்ததும் சவுக்கத் அலி என்ற பெயரை சூட்டியதும் பிறகு ஒரு சில காரணங்களால் அந்தப்பெயரை சண்முகப்பாண்டியன் என மாற்றி சூட்டியதும் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
விஜயகாந்த் தனது இரண்டாவது மகனுக்கு சவுக்கத் அலி என்ற பெயரை சூட்டியதற்கு 2 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இப்ராஹிம் ராவுத்தரை போன்றே விஜயகாந்தின் மற்றொரு மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் சவுக்கத் அலி. இதனால் நண்பனின் பெயரை மகனுக்கு சூட்டியதாகவும், இன்னொரு காரணம் தாம் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதை நிரூபிக்கும் விதமாக முஸ்லீம் பெயரை தனது மகனுக்கு விஜயகாந்த் சூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே தனக்கு சவுக்கத் அலி என்ற பெயரை சூட்டி பிறகு தான் சண்முகப்பாண்டியன் என மாற்றினார்கள் என விஜயகாந்தின் இளைய மகனே ஒரு பேட்டியில் கூட கூறியிருக்கிறார். தாய், தந்தையின் மதம் இந்துவாக இருக்கும் போது குழந்தையின் பெயர் எப்படி முஸ்லீம் பெயர் வரும் என்று பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு சான்றிதழ்கள் பெறுவதில் பிற்காலத்தில் உங்கள் மகனுக்கு சிக்கல் வரலாம் என அதிகாரிகள் சிலர் எடுத்துக் கூறி விளக்கியதால் தான் சவுக்கத் அலி என்ற பெயருக்கு பதில் சண்முகப்பாண்டியன் என பெயரை மாற்ற ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.
அதேபோல் விஜயகாந்தின் உற்றார் உறவினர் சிலரும் இந்த பெயர் விவகாரத்தில் கடும் ஆட்சேபனை தெரிவித்தும் அதைப்பற்றி விஜயகாந்தி அலட்டிக் கொள்ளவில்லை. பாஸ்போர்ட், சான்றிதழ் விவகாரங்களில் சிக்கல் வரக்கூடாது என்பதாலேயே தனது முடிவை அன்று மாற்றிக்கொண்டார். விஜயகாந்தை பொறுத்தவரை மதுரையில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தோருடன் மாமா, மாப்பிள்ளை என உறவுமுறை கூறி வாழ்ந்தவர், வளர்ந்தவர். இதனால் எப்போதும் இஸ்லாமிய சமுதாய மக்கள் மீது நட்புறவு பேணியவர்.












Click it and Unblock the Notifications