எது வாரிசு அரசியல்?.. தேமுதிக தலைவராவது எப்போது?.. பிரேமலதா விஜயகாந்த் அளித்த பரபரப்பு பதில்!
சென்னை: தேமுதிகவின் பொதுச் செயலாளராகவோ கட்சியின் தலைவராகவோ தான் பதவியேற்பது எப்போது என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய முக்கிய பதவிகள் தற்போது வரை விஜயகாந்திடம் உள்ளன. பிரேமலதா பொருளாளராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விஜயகாந்த் நேரடியாக கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை.
இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் தேமுதிகவுக்கு இருக்கிறது. இதனால் கூட்டணி முடிவுகள், கொள்கை முடிவுகளை எடுக்க தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை பிரேமலதா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியினர் நீண்ட நாட்களாக வைத்து வருகிறார்கள்.

விஜயகாந்த்
ஆனால் விஜயகாந்த் இடத்தில் தாங்களோ மற்றவர்களோ வருவதை விரும்பவில்லை என பிரேமலதா தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தேர்தலை காரணம் காட்டியும் கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையும் நிர்வாகிகள் சுட்டி வருகிறார்களாம்.

பிரேமலதா
இதனால் பிரேமலதா விரைவில் அந்த பதவியை ஏற்பார் என்றும் பொருளாளர் பதவியை தனது தம்பி சுதீஷுக்கும் அவர் வகித்து வரும் இளைஞரணி செயலாளர் பதவி விஜய பிரபாகரனுக்கும் வழங்கப்படும் என்ற ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தலைமுறை சேனலுக்கு பிரேமலதா விஜயகாந்த் பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.

பேட்டி
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கட்சியை தொடங்கியதும் அதிகமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது படுபாதாளத்திற்கு சென்றதற்கு காரணம் நாங்கள் வைத்த கூட்டணிகள். தனித்து போட்டியிட்ட போது மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் கூட்டணி வைத்த போது எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

மக்களுடன் கூட்டணி
அதாவது தெய்வத்துடனும் மக்களுடனும்தான் கூட்டணி என கேப்டன் முழங்கியிருந்த நிலையில் திடீரென கூட்டணி பக்கம் போனதால் மக்களுக்கு எங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. ஆனால் கேப்டனை கூட்டணிக்கு செல்லுமாறு கட்சி நிர்வாகிகள்தான் நிர்பந்தித்தனர். மற்றபடி கூட்டணிக்கு செல்வதில் அவருக்கு துளி கூட விருப்பமில்லை.

ஜனநாயகம்
பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களை எதிர்த்தோம். இதுதான் ஜனநாயகம். தவறு என்றால் கூட்டணியை பார்க்க கூடாது, மக்கள் பக்கம் நின்று பார்க்க வேண்டும். அவர்களை விமர்சித்துவிட்டு மீண்டும் அவர்களுடனேயே கூட்டணியா என்ற கேள்வியும் எழுகிறது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் தவறு என்றால் தட்டி கேட்க வேண்டும். கூட்டணி வேறு, தவறுகளை சுட்டிக் காட்டுவது வேறு.

கேப்டன் விரும்பினார்
கேப்டன் விரும்பியதாலேயே அவரை சுதந்திர தினத்திற்கும் அவரது பிறந்தநாளுக்கும் வெளியே அழைத்து வந்தோம். நாங்கள் அவரை கஷ்டப்படுத்தவில்லை. இது முழுக்க முழுக்க அவரது விருப்பம்தான். அது போல் கட்சி எனது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. இன்று வரை கேப்டன் சொல்லுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றார்.

தொண்டர்கள் விருப்பம்
அப்போது தலைவர் பதவி, பொதுச் செயலாளர் பதவியை நீங்கள் (பிரேமலதா) ஏற்பதாக பேச்சுகள் வருகிறது, அது போல் விஜய பிரபாகரனுக்கும் பதவி என்றெல்லாம் சொல்கிறார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேமலதா கூறுகையில் நான் பொதுச் செயலாளராகவோ தலைவராகவோ பதவியேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

காலம்தான் பதில் சொல்லும்
ஆனால் இதை இப்போது சொல்ல முடியாது, இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர், அதன் பிறகு கட்டி காத்தவர் ஜெயலலிதா, அவருக்கு பின், ஓபிஎஸ், இபிஎஸ்.. அது போல் திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா, பிறகு கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என போய் கொண்டே இருக்கிறது. இது போல் தேமுதிகவை பொருத்தவரை தலைமை பதவி குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

வாரிசு அரசியல் இது இல்லை
அது போல் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்தபோது கட்சியினர் வீட்டு விசேஷங்களுக்கு சென்றார். ஆனால் தற்போது அவரால் செல்ல முடியவில்லை. அதனால் விஜய பிரபாகரனை அழைக்கிறார்கள், அவரும் அந்த விழாக்களுக்கு சென்று வருகிறார். எங்கள் கட்சியை பார்த்து வாரிசு அரசியல் என சொல்ல முடியாது. இந்த கட்சி விஜயகாந்தால் சுயம்புவாக உருவானது. மற்ற கட்சிகளை போல் யாரோ உருவாக்கிய கட்சிக்கு நாங்கள் வழி வழியாக சொந்தம் கொண்டாடவில்லை. மேலும் தலைவர், பொருளாளர், இளைஞரணி செயலாளர் ஆகிய பதவிகளை கேப்டன், நான், சுதீஷ் வைத்திருக்கிறோம். மற்ற பதவிகளை எல்லாம் மற்றவர்கள்தானே வகித்து வருகிறார்கள் என பிரேமலதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications