நிர்கதியில் விட்டுட மாட்டார்.. உன்னை மீட்டுவிடுவேன்.. சசிகலா கொடுத்த அந்த வாக்கு.. விரைவில் "அவுட்"!
சென்னை: தனது அக்கா மகன் சுதாகரனுக்கு சசிகலா கொடுத்த முக்கியமான வாக்கு ஒன்றை இன்னும் நிறைவேற்றவில்லையாம்.. மிக விரைவில் அதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து சிறை சென்றவர் அவரின் அக்கா மகன் மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறியப்பட்ட சுதாகரன். இவரும் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில்தான் அடைக்கப்பட்டார்.
இவருக்கும் 4 ஆண்டு சிறை + 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கொடுக்கவில்லை என்றால் கூடுதலாக ஒரு வருட சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
சிறை
சசிகலாவுக்கு இதே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு 4 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து வந்துவிட்டார். ஆனால் சுதாகரனுக்கு இப்படி யாரும் அபராதம் கட்டவில்லை. இதனால் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும் சுதாகரன் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.
ஏன்
சுதாகரனுக்கு சட்ட விதிப்படி அவரின் ரத்த சொந்தத்தினர் யாராவது 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் இந்த 10 கோடிக்கு கணக்கு காட்ட வேண்டும். அதோடு 10 கோடிக்கு வரியும் கட்ட வேண்டும். இதனால் சுதாகரனுக்காக இதுவரை யாரும் அபராதம் கட்ட தைரியமாக முன்வரவில்லை.
என்ன சொன்னார்
சசிகலா சிறையில் இருந்து வந்த பின்.. சுதாகரனுக்கு இது தொடர்பாக நம்பிக்கை கொடுத்துள்ளார். நான் வெளியே வந்துவிட்டேன்.. உன்னை கண்டிப்பாக வெளியே எடுப்பேன் என்று கூறி இருக்கிறார். அதோடு சசிகலாவிற்கு நெருக்கமான சிலரும் சுதாகரனிடம் பேசி உள்ளனராம். உங்களை நிர்கதியில் விட மாட்டார்கள்.. இப்போது சூழ்நிலை சரியில்லை.. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கூறி உள்ளனராம்.
தேர்தல்
தேர்தல் முடியட்டும் என்று சசிகலா காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் முடிந்ததும் சூழ்நிலை சாதகம் ஆகும்.. அபராத தொகையை கட்டி சுதாகரனை வெளியே கொண்டு வருவதே பிளான் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் சுதாகரன் இப்போது வெளியே வர எந்த விதத்திலும் அவசரப்படவில்லை என்கிறார்கள்.
பக்தி
சிறையில் ஏற்கனவே சுதாகரன் பக்திமானாக மாறிவிட்டார். இனி நடப்பது நடக்கட்டும்.. கடவுள் அருள்.. கடவுள் நினைப்பதே நடக்கும் என்று சுதாகரன் அமைதியாகிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் சசிகலாவோ தான் கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.. விரைவில் சுதாகரன் வெளியே வருவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.