"பிரதமர் எங்கள் கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.." சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மத்திய அரசு நாடு முழுக்க சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரம், இதில் பல முக்கிய விவகாரங்களுக்குப் பதில் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின்
இதற்கிடையே மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம் சாதிவாரிக் கணக்கெடுப்பில் மத்திய அரசின் அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கும் திமுகவுக்கும் கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் கேள்வி
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்துத் தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், மத்திய பாஜக அரசு இறுதியாக அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சாதிவாரியாக நடத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசன் அறிவிப்பில் முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை.. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?
மேலும், இந்த அறிவிப்பு வெளியான நேரமும் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் சமூகநீதி என்பது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் அந்தக் கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.
அவசியமானது
கொள்கை வகுத்தல், மக்கள் நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்குச் சாதி கணக்கெடுப்பு என்பது ஆப்ஷனல் இல்லை.. அவசியமானது.. அநீதி எந்தளவுக்கு நடந்துள்ளது என்பதைக் கண்டறியாமல் அதைச் சரிசெய்ய முடியாது.
இது தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும் கிடைத்த முக்கியமான வெற்றி. சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் நாங்கள் தான் முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதை அனைத்து இடங்களிலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி
மற்றவர்கள் மாநில அளவிலான சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தினாலும்.. நாங்கள் உறுதியாக இருந்தோம்.! மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்தியப் பட்டியலில் வருவது.. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும், நடத்த வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் கொள்கையால் நடக்கும் எங்கள் சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி இது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications