இது லிஸ்ட்லேயே இல்லையே.. "மேலும் 2 அமைச்சர்கள்?".. உதயநிதிக்கு என்ன இந்த போஸ்டிங்கா? ஹாட் அறிவாலயம்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: மேலும் இரண்டு அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.. இதுதான் அறிவாலயம் முழுக்க ஒரே பேச்சாக வட்டமடித்து கொண்டிருக்கிறது.
இதுவரை எத்தனையோ அமைச்சர்கள் மீது, கோட்டைக்கும், அறிவாலயத்துக்கும் பலமுறை புகார்கள் சென்றிருக்கின்றன..
இதுவரை எத்தனையோ முறை தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்திகளும் மீடியாக்களில் கசிந்துவிட்டன..

நடவடிக்கைகள்
ஆனால், ஒருமுறைகூட முதல்வர் ஸ்டாலின் அப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை.. அமைச்சரவையையும் மாற்றி அமைக்கவில்லை.. இதற்கு அமைச்சர்கள் மீதான நம்பிக்கை, அளவுக்கு மீறிய பொறுமை, உட்பட பல்வேறு காரணங்களும் உள்ளன.. ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்தான் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் உடனடியாக எடுக்கப்பட வேண்டியதாகிவிட்டது... எனினும் மீண்டும் அமைச்சரவை மாற்றம் என்ற செய்திகள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன.

உதயநிதி
இதற்கும் காரணங்கள் உள்ளன.. கடந்த 3 மாதகாலமாகவே, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு தரப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இதை பற்றி உதயநிதியிடமே செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒருவேளை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அப்போது பேசிக் கொள்ளலாம்... முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலின் தான்" என்று உதயநிதி தெரிவித்திருந்தாலும், அமைச்சர் பதவி தனக்கு கிடைக்காது என்றோ அல்லது அமைச்சர் பதவி தந்தால் ஏற்க மாட்டேன் என்றோ உதயநிதி இதுவரை சொன்னதில்லை. அந்த வகையில், அவருக்கான பதவி எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு
அதேசமயம், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படுமானால், பொறுப்பில் உள்ள வேறோரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட நேரிடும்.. எனவே, அந்த அமைச்சர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வந்தது.. இந்த சூழலில்தான், சில அமைச்சர்கள் தங்களுக்கும் ராஜகண்ணப்பனை போல் வேறு துறையை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரி வருகிறார்களாம்.. ஏற்கனவே அரசு நிகழ்ச்சிகளில் ஒரு எம்எல்ஏவாக உதயநிதி பங்கேற்பதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர் பதவி தரப்படுவதை எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியவில்லை..

கருணாநிதி
எனினும், விரைவில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதிலும் உள்ளாட்சி துறையை உதயநிதிக்கு தரலாம் என்ற யோசனையும் திமுக மேலிடத்தில் உள்ளதாம்.. இதற்கும் காரணம் உள்ளது.. அன்று கருணாநிதி ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் முக ஸ்டாலின்தான்.. அந்த நேரத்தில், ஸ்டாலினும் மாநிலம் முழுதும் விறுவிறு சுற்றுப்பயணம் செய்து, அந்த துறையில் திறன்படவே செயலாற்றினார்..

பெரிய கருப்பன்
ஸ்டாலினின் பிற்கால அரசியல் எழுச்சிக்கு, அவருக்கு ஒதுக்கப்பட்ட அந்த துறைதான் பெரிதும் அடித்தளமிட்டது என்பதை மறுக்க முடியாது.. அதே போலதான், உதயநிதிக்கும் உள்ளாட்சி துறையை ஒதுக்க மேலிடம் முடிவு செய்து வருகிறதாம். இதற்காகவே, கேஎன் நேருவிடம் இருந்து நகர்ப்புற நிர்வாகத்துறையும், பெரிய கருப்பனிடம் இருந்து ஊரக வளர்ச்சி துறையும் பறிக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் வேறு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன..

குஷி நிகழ்வு
அன்று ஸ்டாலின் எப்படி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினாரோ, அதே ரூட்டிலேயே உதயநிதி செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வரும் மே 7ம் தேதி திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிய உள்ள நிலையில் அதை கொண்டாட சட்டசபையில் ஏற்பாடுகள் நடக்கிறது.. அந்த நிகழ்வில்தான் இத்தகைய மாற்றங்கள் அரங்கேறலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications