விஜய் கட்சியில் இணைவது எப்போது? திட்டம் இருக்கா? ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலளித்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றார். இப்போது இவர் நடிப்பில் தயாராகி உள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் சுமன் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் கேஜிஎஃப்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைப் பற்றியும் அரசியல் எண்ட்ரி பற்றியும் பல்வேறு விசயங்களுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'மகாநடி' படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றதற்குப் பிறகு அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 'ரகு தாத்தா' இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அரசியல் காமெடி கலந்த திரைப்படம். இது குறித்து கீர்த்தி சுரேஷ் பேசும் போது, "பெண்கள் மீது பல விசயங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றது. இது அன்றைக்கும் இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சின்ன சின்ன வார்த்தைகளில் அவஒ ஒளிந்துள்ளன. திரும்ப அதைப் பற்றி யோசிக்கும் போதுதான், ஆமாம். இவை பெண்கள் மீது திணிக்கப்படுகின்ற விசயங்கள்தான் என்பது புரிய வருகிறது.
'ரகு தாத்தா' படத்தில் 'காலங்காலமாக வந்தால் கலாச்சாரம். திடீரென்று வந்தால் திணிப்பா?' என்று ஒரு டயலாக் வரும். இப்படி பல காலங்களாகக் கலாச்சாரம் என்ற பெயரில் திணிக்கப்படும் விசயங்களைத் தொட்டுத் தொட்டு இந்தப் படம் பயணிக்கிறது. படத்தில் இந்த வசனங்கள் தீவிர தன்மையில் பேசப்பட்டு இருக்காது. காமெடியாகவே கையாண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
அவரிடம் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு உங்களது ஆதரவு தருவீர்களா? அரசியலுக்கு வரும் திட்டம் இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், "இப்போதைக்கு சினிமாவில்தான் என் கவனம் உள்ளது. இப்போதைக்கு அரசியல் ஆசை இல்லை. நாளை என்ன நடக்கும் எனத் தெரியாது. இப்போது வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பிறகு நான் வருங்காலத்தில் ஒருவேளை வந்தால், அன்றைக்கு வரமாட்டேன் என்று சொன்னீர்களே என்றும் கேட்பார்கள். ஆகவே இப்போதைக்கு எனக்கு அரசியல் ஆசை இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
இந்தியைப் பற்றிப் பேசும்போது கூட நாம் திணிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். படத்தில் அதை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு பல திணிப்புகள் பற்றிப் பேசுகிறோம். இதில் கதாநாயகி தரப்பிலிருந்து கதை சொல்லப்பட்டுள்ளது. கதாநாயகர் மூலம் இந்தக் கதை சொல்லப்பட்டு இருந்தால் ஒரு 'கிக்' இருக்காது என்று டைரக்டர் விரும்பினார். அதைக் கேட்டு தான் நான் நடிக்க முன்வந்தேன்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தி திணிப்பை வைத்து ஒரு படத்தை இயக்க முடியும். அப்படி ஒரு விசயத்தைப் பேச முடியும். நம்ம ஊர் மக்கள்தான் இதைப் புரிந்துகொள்ளுவார்கள். வேறு மாநிலத்தில் இதைப் புரிந்து கொள்வது கஷ்டம். ஆகவேதான் படத்திற்கு 'ரகு தாத்தா' என்று வைத்தோம். இங்கே இந்தியே வேண்டாம் என யாரும் பேசவில்லை. இந்தி திணிப்பு என்ற விசயத்தைத்தான் வேண்டாம் என்று பேசுகிறோம். இந்தி மொழி மட்டும் இல்லை. எதையுமே திணிக்கக் கூடாது என்பதுதான் வாதம். படத்தில் திணிப்பு என்பதுதான் மெயின் கான்செப்ட். அதை இந்தி திணிப்பு மூலமாக கனெக்ட் செய்து சொல்லி இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். கூடுதலாக அவரிடம் பெண்கள் பாதுகாப்பு சினிமாவில் எந்தளவு இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
அதற்குக் கீர்த்தி சுரேஷ், "சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு நன்றாகவே உள்ளது. பல துறைகளைப் போலத்தான் சினிமாவும். மற்ற துறைகளில் எல்லாம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. அதைப் போன்றுதான் சினிமா. வேறு துறைக்குள் நடக்கும் விசயங்களைப் பிரதானமாக யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. சினிமா என்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த ஹைப் இருப்பதால் சினிமாவில் மட்டும் பெண்கள் பாதுகாப்பு இல்லாததைப் போல ஒரு தோற்றம் தெரிகிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications