பட்டா மாறுதல், நில அளவீடு செய்வதில் சிக்கல்? சர்வேயர்களை காணோம்.. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் நிலத்தை அளவீடு செய்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, டிஜிட்டல முறைக்கு மேம்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாகவும் இருந்து வருவதை மறுக்க முடியாது.. எனினும் நிலத்தை அளவீடு செய்வதில் மக்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாம்.. இந்த சிக்கலை களைய வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர்.. அது என்ன சிக்கல்?
தமிழகத்தை பொறுத்தவரை, பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.. அதேபோல, பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு ஆகியவற்றில் உள்ள பிழைகளையும் திருத்த வேண்டியது அவசியமாகிறது.

நில அளவீடு அவசியம்
எனவேதான் நம்முடைய அரசும் அதற்குரிய வசதிகளை செய்து தந்தவாறே உள்ளது.. சமீபத்தில்கூட, பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்குவதற்கு அரசு ஒப்புதல் தந்து, நில அளவை துறைக்கு புதிதாக 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த ரோவர் கருவிகள் மூலம், ஒரு நிலத்தின் அளவு, சம்பந்தப்பட்ட நிலம் எங்கே அமைந்துள்ளது? என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.. மேலும், அதிக பரப்பளவு நிலங்களை, மிக குறைவான நேரத்திற்குள் அளப்பதற்கும் இந்த ரோவர் கருவிகள் உதவியாக இருக்கும்..
ரோவர் கருவி சபாஷ்
இந்த ரோவர் கருவியின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.. நம்முடைய தமிழக அரசு 200 ரோவர் கருவிகள் வாங்கி, நில அளவைத்துறை பணியாளர்களுக்கும் ஒதுக்கியிருப்பது, வருவாய்த்துறையின் கவனத்தை பெற்று வருகிறது.
அதேபோல 2 மாதங்களுக்கு முன்பு சர்வேயர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போவதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்..
அதாவது பொதுமக்கள் விண்ணப்பம் செய்ததுமே, நில அளவையை உடனுக்குடன் செய்து தருவதற்காக, சர்வேயர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என்று நம்பிக்கை கூறியிருந்தார்.. ஆனால், இப்போது சர்வேயர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சலசலப்புகள் எழுந்துள்ளன..
சர்வேயர்களை காணோம்
வீடு, மனை வாங்குவோருக்கு, நிலத்தை அளந்து, வரைபடம் தயாரித்து தர வேண்டியது சர்வேயர்கள்தான்.. தாலுகா மற்றும் குறுவட்ட அளவில், நில அளவையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.. ஆனால், சமீப காலமாகவே பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிகரித்து விட்டநிலையில், சர்வேயர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது..
இதன்காரணமாக, கட்டுமான பொறியியல் பிரிவில், பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு, நில அளவை பயிற்சி தந்து, லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நில அளவை துறை இதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு லைசென்சும் தருகிறது.. அந்தவகையில், இதுவரை 1300 பேர் உரிமம் பெற்றுள்ளனர்... இவர்களில் பெரும்பாலானவர்கள், அரசின் பல்வேறு துறைகளில் நில அளவை பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
செல்போன் நம்பர் தேவை
ஆனால், நில அளவீடு, பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் காத்திருக்கும் நிலையில், உரிமம் பெற்ற நில அளவையாளர்களை பொதுமக்கள் எங்கே, எப்படி அணுகுவது என்று தெரியவில்லையாம்.. இதனால் பணிகளை முடிப்பதில் கால தாமதமாவதாக புலம்புகிறார்கள்.
எனவே ஒவ்வொரு பகுதிக்கும் உரிமம் பெற்ற நில அளவையாளர் யார் என்ற விபரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.. மேலும் தாலுகா அலுவலகங்களிலும் இவர்களின் முழு விவரங்களையும், நில அளவை துறை வெப்சைட்டில் அவர்களின் தொடர்பு எண்ணையும் வெளியிட்டால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள்கள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications