யாருக்கு விழுந்தது அடி? எடப்பாடி பழனிசாமி சறுக்கியது இங்கே தானா? அதிமுகவை வீழ்த்திய அந்த 3வது சக்தி?
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய அரசியல் யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.. குறிப்பாக சிஎன்என் நியூஸ் 18 போன்ற நிறுவனங்கள் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அதிமுக எட்டிப்பிடிக்குமா அல்லது வாக்குச் சிதறல்கள் தடையாக இருக்குமா என்பதே தற்போதைய பிரதான விவாதமாக மாறியுள்ளது..
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து இந்த யூகமான முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.. பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவின் பலம் குறைந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்த துவங்கிவிட்டதாம்.
எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலை மிகத்தீவிரமாக எதிர்கொண்ட போதிலும், கணிப்புகளின்படி அதிமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணங்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.
எடப்பாடி பழனிசாமி ஓட்டு யாருக்கு
வழக்கமாக ஆளுங்கட்சிக்கு எதிராக விழும் அதிருப்தி ஓட்டுக்கள் அப்படியே பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குத்தான் வந்து சேரும்.. ஆனால், இந்த முறை அந்த ஓட்டு வங்கி சிதறிப் போயிருப்பதே எடப்பாடி பழனிசாமியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. குறிப்பாக, திமுக அரசின் மீதான அதிருப்தி ஓட்டுக்களை முழுமையாக அறுவடை செய்ய அதிமுக தவறியுள்ளது என்றே தெரிகிறது.
இந்த தேர்தலில் தவெக என்ற புதிய சக்தியின் வருகை அதிமுகவின் கணக்குகளை தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது..
13 முதல் 26 தொகுதிகள் வரை தவெக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களும், குறிப்பாக நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுக்களும் எடப்பாடி பழனிசாமியை நோக்கிச் செல்லாமல் விஜய்யின் பக்கம் திசைமாறியுள்ளன.
சப்போர்ட் தந்த கணிப்பு
மற்ற அனைத்து கணிப்புகளும் திமுகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், சிஎன்என் நியூஸ் 18 நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு மட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்தக் கணிப்பின்படி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை விட அதிகமாக, அதாவது 114 முதல் 124 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணி கைப்பற்றி ஆட்சியைக் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதேநேரம் திமுக கூட்டணி 103 முதல் 113 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்திக்கும் என்றும், விஜய்யின் தவெக 4 முதல் 10 இடங்களைப் பிடிக்கும் என்றும் இந்தக் கணிப்பு கூறுவது அதிமுக தொண்டர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது..
50 முதல் 65 மட்டுமே கிடைக்கும்
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக மற்றும் நாதக போன்ற கட்சிகளுக்குப் பிரிந்து சென்றதால், அதிமுகவால் எதிர்பார்த்த வெற்றியை எட்ட முடியாமல் போனதாகத் தெரிகிறது..
சாணக்கியா, பி-மார்க் போன்ற நிறுவனங்களின் கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கு 50 முதல் 85 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று சொல்கின்றன. இது கடந்த முறையை விடக் குறைவான எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அதாவது, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் காரணி மற்றும் டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட வாக்குச் சிதறல்கள் அதிமுகவின் கோட்டைகளை பலவீனப்படுத்தியுள்ளன என்றே சொல்லலாம்.. அதேசமயம், வோட் வைப் போன்ற ஓரிரு நிறுவனங்கள் அதிமுகவுக்கு சாதகமான முடிவுகளைக் காட்டினாலும், ஒட்டுமொத்த சராசரி முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவாலான சூழலையே பிரதிபலிக்கின்றன..
எங்கே சறுக்கினார் எடப்பாடி பழனிசாமி?
மேற்கண்ட அனைத்துமே ஒருவகையான கணிப்புகள்தான், யூகங்கள்தான்.. மற்றபடி, எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வியூகத்தில் எங்கே சறுக்கினார் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் முழுமையாகத் தெரியும்..
தற்போதைய கணிப்புகளின்படி, ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களைத் தன்வசப்படுத்த விடாமல் தடுத்த புதிய அரசியல் சக்திகளின் எழுச்சியே அதிமுகவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளதாக தெரிகிறது.. இந்த முடிவுகள் உண்மையானால், அதிமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க மிகப்பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications