நோட்டமிடப்படும் 600 நம்பர்ஸ்.. அந்த நொடியே பறந்த கார்.. ராஜேந்திர பாலாஜி எங்கே? தலைமறைவானது எப்படி?
சென்னை; அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது எங்கே இருக்கிறார், கைது செய்யப்படுவாரா என்பதுதான் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இவரை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றன.
Recommended Video
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில்தான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் தீர்ப்பு வந்தது. அதே நாளில்தான் காலை தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகரில் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதே ராஜேந்திர பாலாஜிதான்.

ராஜேந்திர பாலாஜிக்கு தெரியும்
இந்த போராட்டத்தில் இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு வழக்கில் தீர்ப்பு எதிராக வரலாம் என்று எச்சரிக்கை சென்றுள்ளது. உடனே தயார் ஆகுங்கள் என்று அவருக்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவர் எப்போதும் செல்லும் காரில் செல்லாமல் வேறு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார் என்று கூறப்படுகிறது. கேஸ் எதிராக செல்லலாம் என்று தெரிந்த நொடியே ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அந்த நொடியே எஸ்கேப்
அப்போது சென்றவர்.. அதன்பின் எங்கே சென்றார்.. எங்கே தங்கி இருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. வீட்டிற்கோ, அலுவகலகத்திற்கோ, நண்பர்கள் வீட்டிற்கோ செல்லவில்லை. இவரை தேடுவதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள், சென்னை என்று தனி தனியாக இந்த படை தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகிறது.

டிரேசிங்
இதில் முக்கியமான விஷயம், ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 நபர்களின் நம்பர்களை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி மீண்டும் போன் செய்கிறாரா என்று பார்த்து வருகிறார்கள். ஒருவேளை ராஜேந்திர பாலாஜி போன் செய்தால் அதன் மூலம் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வகையில் அவர்களின் செல்போன் எண்களை போலீசார் நோட்டமிட்டு வருகிறார்கள்.

தோட்டத்தில் விசாரணை
இது போக ராஜேந்திர பாலாஜி கார் டிரைவர் ராஜ்குமார், ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன்களான ரமணா, ஆகியோரையும் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள். இது போக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை அவருடைய தோட்டத்திலேயே போலீசார் விசாரணை செய்து உள்ளனர். ராஜேந்திர பாலாஜி கிடைக்கும் வரை உங்களின் போன் ஆனில் இருக்க வேண்டும்.. உங்களுக்கு அவர் போன் செய்ய வாய்ப்புள்ளது என்றும் போலீசார் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அமைச்சர் உறுதி
இன்னொரு பக்கம் இன்று அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜேந்திர பாலாஜி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள். அவர் மீது கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். இதனால் விரைவில் ராஜேந்திர பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் உள்ளதாகவே அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம்
அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் எப்படியாவது கைதுக்கு ஸ்டே வாங்கும் தற்காலிக உத்தரவை பெற ராஜேந்திர பாலாஜி திட்டமிட்டு வருகிறார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க அவர் கோரிக்கை விடுப்பார். இதில் முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் ராஜேந்திர பாலாஜி கைதாவது உறுதியாகிவிடும்.












Click it and Unblock the Notifications