எல். முருகன் எங்கே? அமித் ஷா மீட்டிங்கில் காணோமே.. வலைவீசிய உளவுத்துறை.. கடைசியில் வந்த ஷாக் பதில்
சென்னை: அமித் ஷா கலந்து கொண்ட 2 நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை மத்திய அமைச்சர் முருகன். அவரின் இந்த "ஆப்சென்ட்" விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று வேலூரில் நடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். நேற்று அமித் ஷா தனது பயணத்தில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். அமித் ஷா அமைச்சராக இல்லாமல்.. முழுக்க முழுக்க பாஜக சார்பான அரசியல் பணிக்காக அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று காலை 11.40 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

பாஜக கட்சி நிர்வாகம், நாடாளுமன்ற தேர்தல்., கூட்டணி அமைப்பது, தொகுதிகள் தேர்வு செய்வது, திமுகவிற்கு எதிராக வியூகம் வகுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமித் ஷா நேற்று ஆலோசனை செய்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் சுமார் ஒரு மணி நேரம் அமித் ஷா ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வந்த அமைச்சர் அமித்ஷா இரவோடு இரவாக அரசியல் சாராத பிரபலங்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். அரசியல் சார்ந்த, சாராத பிரபலங்கள் என்று பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுடன் சந்திப்பு நடத்தினார். அதன்பின் வேலூரில் நடந்த கட்சி கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
எல் முருகன் எங்கே? : அமித் ஷா கலந்து கொண்ட 2 நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை மத்திய அமைச்சர் முருகன். எல் முருகன் நேற்று அமித் ஷாவை வரவேற்ற நிலையில் அதன்பின் எங்குமே காணவில்லை. மேடையில் எந்த இடத்திலும் எல் முருகன் இடம்பெறவே இல்லை.
முன்னதாக வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்துவதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் எல்லாம் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் என்று அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.
அண்ணாமலைக்கும் எல் முருகனுக்கும் உறவு நன்றாக இல்லை என்று கூறப்படும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அண்ணாமலையை அமித் ஷா பாராட்டிய நிலையில் மேடையில் எங்கும் எல் முருகன் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் அமித் ஷா. அவருடன் அண்ணாமலை சென்றார்.'
அதோடு அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சுதாகர் ரெட்டி கூட ஹெலிகாப்டரில் இருந்தனர். ஆனால் எல் முருகன் இந்த பயணத்தில் இல்லை. அதனால், முருகன் எங்கே போனார்? என உளவுத்துறையும் பாஜக தரப்பும் நேற்று முழுவதும் வலைவீசித் தேடியிருக்கிறார்கள்.
அமித் ஷாவின் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழலில், சென்னையிலேயே இருந்த முருகன், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போலீசாருக்கு தெரியாமல், தனது நண்பரின் காரில் ஏறி சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. சென்னையில் சில முக்கிய இடங்களுக்கு சென்றிருந்திருக்கிறார்.
நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லையாம் முருகன். இதனால் அதிர்ச்சியடைந்த மாநில உளவுத்துறை, முருகன் எங்கே போனார் ? என்று தேடியிருக்கிறது. ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போல, கமலாலய தரப்பும் முருகன் எங்கே போனார்? என விசாரித்து விசாரித்து டயர்டு ஆகி விட்டதாம்.
அவர் இடைப்பட்ட நேரத்தில் யாரைசந்தித்தார்.. யாருடன் பேசினார்.. என்ன பேசினார் என்பது பெரிய புதிராக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications