பலமான எதிர்க்கட்சி எங்கே? விஜய் வருவாரா? கணித்து சொன்ன எம்பி கனிமொழி
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் எதிர்க்கட்சியாக வருவாரா என்பது பற்றி திமுக எம்பி கனிமொழி மறைமுகமாகப் பதிலளித்திருக்கிறார்.
ரயில்வே திருத்த மசோதா 2024 குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிப் பேசி இருந்தார். அவர் தன் உரையின் போது, "ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் வழக்கம்போல் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என ஆணையிடுவதைப் போலவே ரயில்வே மசோதா 2024 விவகாரத்திலும் நடந்துகொண்டுள்ளது" என்று கூறியிருந்தார். கூடவே தெற்கு ரயிலே மண்டலத்தின் தரம் மிக மோசமாக இருப்பதாகவும் அங்கே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுப் பேசிய அவர் ரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க முன்மொழிந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

கனிமொழி கடந்த 2007 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் 2019 தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த ஆண்டு 2024இல் மீண்டும் அதே தொகுதியின் எம்பியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் அளித்த இந்தப் பதவியைக் கடந்து அவர் திமுகவின் மகளிர் அணிச் செயலாளராகவும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். திமுகவில் செல்வாக்கு மிக்க பெண் தலைவர்களில் முதன்மையானவர் கனிமொழி. திமுக முதன்மை குடும்பமான கருணாநிதியின் வாரிசு என்பதால், இந்த வாய்ப்பு அவருக்கு இயல்பாகவே கிடைத்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் விவகாரத்தில் அவர் பேசிய பலரது கவனத்தைப் பெற்றது. கடந்த 2 ஆண்டுகள் முன்னதாக தமிழ்நாட்டில் கறுப்புப் பணம் புழக்கம் அதிகம் இருப்பதாக பாஜக எம்பி ஒருவர் பேசிய போது, அதற்குப் பதிலளித்த கனிமொழி, 'பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் ஒழித்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்த பிறகும் எப்படிக் கறுப்புப் பணப் புழக்கம் இருக்கிறது எனது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது' என்று பதிலடி தந்தார்.
நாடாளுமன்றத்தில் இந்தியில் பாஜக அமைச்சர் பதிலளித்த போது, அது தனக்குப் புரியவில்லை என்றும் இந்தி தெரியாது என்றும் வெளிப்படையாகப் பேசினார். இப்படிப் பலமுறை நாடாளுமன்றத்தில் தனித்துத் தெரியும்படி பல உரைகளை நடத்திய கனிமொழி, தனக்கு ஒரு காலத்தில் அரசியல் ஆர்வம், அரசியல் உணர்வு இருந்தது மட்டுமே இருந்தது. ஆனால் அதற்குள் வரக்கூடாது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன் என்று முடிவு செய்திருந்ததாகச் சமீபத்தில் அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.

சிறுவயதிலேயே அரசியல் சூழலில் வளர்ந்ததால் அவருக்கு அரசியல் பற்றிய ஒரு பார்வை இருந்ததாகவும் தனது இளம் வயது புகைப்படங்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு கட்சிக் கூட்டத்தின் நடுவே குழந்தையாக அம்மா மடியில் தூங்கிக் கொண்டிருப்பதைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன் என்றும் பேசி இருக்கிறார். கனிமொழி தினமும் அரசியல் விவாதங்கள் நடைபெற்ற குடும்பச் சூழலில் வளர்ந்தவர். கட்சிக்கும் வீட்டுக்கும் எனத் தனித் தனியாக ஒரு சூழலை அனுபவிக்காமல் வளர்ந்தவர். அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத் தான் முடிவு செய்யவில்லையாம். அவருக்கு வெளிநாட்டில் படிக்கவேண்டும். நிறைய எழுத வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் இருந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் "அப்பாதான் ஒரு கட்டத்தில் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என்ற விருப்பைத்தை முன்வைத்திருக்கிறார். அதற்கு முன்பே அவருக்கு நண்பர்கள் சிலர் அரசியலுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர். குறிப்பாக விசிக எம்பி ரவிக்குமார் அவரை சந்திக்கும் போது எல்லாம் அரசியல் வாழ்க்கைக்குள் வரும்படி ஆலோசனை வழங்கினார். நான் தான் கொஞ்சம் தயக்கம் காட்டினேன்" என்ற ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தினம் உள்ளே செல்லும் போதே இன்றைக்கு எழுப்ப வேண்டிய கேள்வி என்ன? எதிர்வினைகள் வந்தால் அதற்கான பதில் என்ன? என்ற தெளிவுடனே உள்ளே செல்வேன் என்று சொல்லி இருக்கும் அவர் அரசியல் என்பது சாக்கடை எனப் பலரும் நினைத்து ஒதுங்கிவிட்டால் அதை யார் தான் சுத்தம் செய்வது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய் அரசியல் வருகை பற்றிப் பேசிய கனிமொழி, "எதிர்க்கட்சி வரிசையில் பலமாக யாருமே இல்லை. முன்பு கருணாநிதி மறைவுக்குப்பின் தலைவர்கள் வரிசையில் ஒரு வெற்றிடம் உள்ளது என்றார்கள். இப்போது எதிர்க்கட்சி வரிசையில் ஒரு வெற்றிடம் உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் நிரப்ப முயற்சி செய்யலாம். புதியதாக வருபவர்கள் நிஜமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். நிறையப் பேர் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு தங்கள் உட்கட்சிக்குள்ளாகவே சண்டைபோட்டுக் கொள்கிறார்கள்"என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications