இந்த நேரம் பார்த்து அதிகரிக்கும் கொரோனா.. "அது" என்னாகுமோ..? கலங்கும் வேட்பாளர்கள்!
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் நாக்பூரில் ஒரு வாரமும், நொய்டாவில் ஏப்ரல் 30 வரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி ஒரு புறும் நடந்து வந்தாலும், கொரோனா பரவலும் மறுபுறும் அதிகரித்து வருகிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1 சதவீதம் குறைந்த கொரோனா பரவல், கடந்த 10 நாட்களில் 1.2 சதவீதத்திற்கும் அதிகமாக பரவி உள்ளது. 10 நாட்கள் முன்பு வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது 800 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பிரச்சார கூட்டங்களால் பரவும் கொரோனா
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து, அரசியல் கட்சிகள் தலைவர்களும், தொண்டர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். முக்கிய தலைவர்களின் பிரச்சாரங்கள், அரசியல் கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா முன்பை விட வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நிறுத்தப்படுமா ?
கொரோனா பரவலால் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும், இதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் நிறுத்தப்படலாம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் ஓட்டுப்போட வருவார்களா ?
கொரோனா பரவல் சூழலில் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஒட்டளிப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. இருந்தும் பக்க நோய்களை கொண்டவர்கள் எப்படி ஓட்டளிக்க வருவார்கள் என தெரியவில்லை.

ஓட்டு சதவீதம் பாதிக்கப்படுமா ?
கொரோனா அச்சம் காரணமாக பலரும் ஓட்டளிப்பதை தவிர்க்கவே வாய்ப்புள்ளது. இதனால் பதிவாகும் ஓட்டு சதவீதம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே 100 சதவீதம் ஓட்டுப்பதிவை கொண்டு வர முடியாமல் தவிக்கும் தேர்தல் கமிஷனுக்கு, கொரோனா பெரும் சவாலாகவே இருக்கும்.

கலக்கத்தில் கட்சிகள்
ஓட்டு சதவீதம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் முதல்வர் கனவில் இருக்கும் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வரும் வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே அதிக கட்சிகள், அதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளது, நோட்டா என ஓட்டுக்கள் பிரிய பல காரணங்கள் இருக்கும் நிலையில் கொரோனாவால் ஓட்டு சதவீதம் குறைந்தால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பலர் வெற்றி வாய்ப்பை தவற விடவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications