விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்.. எங்கிருந்து கிளம்பியது? உள்ளே தமிழர்கள் இருந்தனரா! பரபர
சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து கிளம்பிய விரைவு ரயில் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இப்போது விபத்தில் சிக்கிய இந்த கோரமண்டல் ரயில் குறித்து முழு தகவல்களையும் பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறநகரில் இருந்து கிளம்பிய கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த ரயில் பாலசோர் மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது.
பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது அங்கே இருந்து மற்றொரு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோசமான விபத்து தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இருந்தும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான குழு ஒடிசா விரைகிறது.
விபத்தில் சிக்கிய இந்த ரயில் குறித்து முழு தகவல்களைப் பார்க்கலாம். இந்த ரயில் கொல்கத்தாவின் புறநகரில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.20 மணிக்குக் கிளம்பும். இந்த ரயிலின் எண் 12841 ஆகும்.
இந்த ரயில் ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னைக்கு வந்தடைகிறது. முதல் நாள் மாலை 3.20 மணிக்குக் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும் இந்த ரயில் மறுநாள் மாலை 4.50 மணிக்குச் சென்னை சென்டிரல் வந்தடையும்.
மொத்தம் 25 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும் இந்த ரயில் 1659 கிமீ கடந்து செல்லும். இதில் இடையில் 14 நிறுத்தங்களில் ரயில் நின்று செல்லும். அதன்படி இன்று மாலை கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. கடைசியாக பாலசோர் என்ற ரயில் நிலையத்தில் மாலை நின்றுள்ளது. அங்கிருந்து கிளம்பிக் கொஞ்ச நேரத்திலேயே அந்த ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்ப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு தினசரி இயக்கப்படும் இந்த ரயிலில் எப்போதும் அதிகம் தமிழர்கள் பயணிப்பார்கள் என்பதால் இந்த ரயிலிலும் தமிழர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் எத்தனை பேர் இதில் பயணித்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications