"130 கிமீ" வேக புயல் காற்று.. கோடையில் பட்டையை கிளப்பும் "மோச்சா புயல்.." தமிழகத்திற்கு மழை இருக்கா
சென்னை: வங்கக் கடலில் இப்போது மோச்சா புயல் உருவாகியுள்ளது. கோடைக் காலத்தில் உருவாகியுள்ள இந்த மோச்சா புயலால் எங்கெல்லாம் மழை வரும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் கோடைக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வேற லெவலில் இருக்கும். பல இடங்களில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.
சில இடங்களில் மதிய நேரத்தில் மக்கள் வெளியே செல்லவே யோசிக்கும் அளவுக்கும் வெப்பம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

புதிய புயல்: இந்தாண்டைப் பொறுத்தவரைக் கடந்த பிப். மாதமே கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் பின்னரும் கூட வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இந்தச் சூழலில், கடந்த சில காலமாகவே குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டது. நம்மைப் போட்டுப் புரட்டி எடுத்த நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்தது. இந்தச் சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சமீபத்தில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது.
அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்லக் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முதலில் உருவானது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வியாழக்கிழமை மோச்சா புயலாக வலுவடைந்தது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இது புயலாக வலுப்பெற்றது.
தமிழ்நாட்டிற்கு மழை இல்லை: கோடைக் காலத்தில் உருவாகும் இந்த புயலால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த புயல் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்ததால் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்காது என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்த மோச்சா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 6 பேரிடர் மீட்பு குழுக்கள் இறக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக் குழுக்கள் உடன் கடலோர காவல்படை குழுவும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதிகளில் தீவிரமாகக் கடலோர காவல்படை, பேரிடர் மீட்புக் குழுக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

எங்கே கரையை கடக்கும்: இந்த மோச்சா புயல் நாளை மே 12 பிற்பகலில் மிகக் கடுமையான புயலாக மாறும். மேலும், இது வரும் மே 14ஆம் தேதி காலை வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள குக்பியூ ஆகிய இடங்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோச்சா கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும். இருப்பினும், இது மேற்கு வங்கத்தை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கு வங்க அரசு ஏற்கனவே கடலோரப் பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. மேலும், கடலில் தீவிரமாகக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் எப்படி உருவாகும்: பொதுவாகவே அனைத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளும் புயலாக வலிமையடையாது. புயல் உருவாகப் பல காரணங்கள் உள்ளன.. முதலில் கடலுக்கு மேல் இருக்கும் வெப்பம் 26 டிகிரியாக இருக்க வேண்டும். அடுத்து அது நிலத்தில் இருந்து நன்கு தள்ளி கடல் பகுதியில் இருக்க வேண்டும். அப்போது தான் புயலாக மாறுவதற்கு முன்னரே கரையைக் கடக்காது. இத்துடன் வறண்ட காற்றும் இருக்கக் கூடாது. இவை அனைத்தும் சேர்ந்தே புயலை உருவாக்குகிறது.












Click it and Unblock the Notifications