கேள்வி கேட்டால் துரோகியா?.. அப்ப கட்சிக்காக உழைத்தது யார்?.. வைகோவுக்கு மதிமுக நிர்வாகி கேள்வி
சென்னை: மதிமுகவில் உள்ள இரு துரோகிகள் யார் என்பதை பொதுச் செயலாளர் வைகோ விளக்க வேண்டும் என மூத்த நிர்வாகி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மதிமுகவில் பொதுக் குழு கூட்டத்தை அவைத் தலைவர் துரைசாமி, மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட 25-த்தும் மேறப்ட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும் ஆட்சிமன்றக் குழுச் செயலாளருமான செங்குட்டுவன், வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிருப்தி நிர்வாகி
இவர் அதிருப்தி நிர்வாகி என்றும் தெரிகிறது. இவர் எழுதிய கடிதத்தில்: எந்தெந்த தேர்தலில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என, கள நிலவரத்தை அறிந்து, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, தேர்தலில் போட்டியிட்டிருந்தால், பல நிர்வாகிகள் கை காசை இழந்து, வீதிக்கு வந்திருக்கும் நிலை உருவாகியிருக்காது.

எங்களை கலந்தாலோசிக்கவில்லை
நீங்கள் எப்போதும் உயர்நிலைக் குழுவை கலந்து ஆலோசிக்காமல், உங்கள் முடிவை நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள். தற்போதும் உங்கள் முடிவை நிலை நாட்டி உள்ளீர்கள்; அது உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. இனிமேல் உயர்நிலைக் குழு அவசியமற்றது.

உயர்நிலை குழு
உயர்நிலைக் குழுவில், ஒன்பது பேர் அங்கம் வகிக்கிறோம். நாங்கள் துரோகிகள் என்றால், தியாகிகள் யார் என்பதை தெரியப்படுத்தவும். பொதுக்குழு மேடையில், 'துரோகிகள் ஓரிருவர் இன்னும் இங்கு உள்ளனர்' என சொன்னீர்களே... அந்த இருவர் யார்?

கேள்வி கேட்டால் துரோகியா
கேள்வி கேட்டால் அவர்கள் துரோகிகளா, அப்படியெனில் கட்சிக்கா பணி செய்தது யார் என சொல்லுங்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாலர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கொடுத்த போதிலிருந்து கட்சிக்குள் மோதல் வெடித்தது.

திமுகவிலிருந்து விலகிய வைகோ
வைகோ திமுகவில் இருந்த போது மறைந்த முதல்வர் கருணாநிதி தனது வாரிசுகளை அரசியலுக்கு கொண்டு வந்ததாக எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியிலிருந்து வெளியேறி மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் வைகோ. தற்போது அவருடைய கட்சியிலேயே வாரிசு அரசியல் தலைதூக்கியதால் நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் பலரது எதிர்ப்புகளை மீறி அண்மையில் துரை வைகோவுக்கு மதிமுக செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications