Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்ஃபு வாரிய சொத்துகளை தந்தது யார்? வேறு மதத்தினருக்கு என்ன வேலை? திருத்தம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிக்கப் பிற மதத்தினர் உறுப்பினராக நியமிக்கப்படும் போது இந்து சமய சொத்துகளை நிர்வாகம் செய்ய இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்களா? அதைச் சட்டம் அனுமதிக்குமா? என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எழுப்பியுள்ளார்.

வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இந்தப் புதிய மசோதாவைச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வழக்கமாகச் சட்டத்திருத்தங்கள் என்றால் ஒரு சில விதிகளை மட்டும் மாற்றுவார்கள். முன்னதாக அதிகபட்சம் 10 திருத்தங்கள் வரை செய்யப்பட்டுள்ளன. ஆனால், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தில் இந்த முறை 40க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல ஷரத்துகளை ரத்து செய்ய புதிய மசோதா முன்மொழிந்துள்ளது. இஸ்லாமியப் பெண்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் உட்பட, பல மாற்றப்பட்டுள்ளன.

Waqf Board PM Modi

இந்தச் சட்டத் திருத்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, "இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது" எனக் காட்டமாகக் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய அசாதுதீன் ஓவைசி, "இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25வது சட்டப் பிரிவுகளின் விதிகளை மீறுகிறது. இது பாரபட்சமானது. இந்த மசோதாவைக் கொண்டு வந்ததன் மூலம் மத்திய அரசு தேசத்தை ஒன்றிணைக்காமல் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதாவே ஒரு சான்று" எனக் கூறியுள்ளார்.

இந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் பற்றி மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சில கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். அவர் இந்தத் திருத்தம் பற்றிப் பேசுகையில், "வக்ஃபு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் யாராவது கோரிக்கை வைத்தார்களா? இதற்கு முன்பாக நடந்த முத்தலாக் விவகாரத்தில் கூட நீதிமன்றம் சில கருத்துகளை முன்வைத்ததால், இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருந்ததால் அதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது இந்த வக்ஃபு சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான தேவை எங்கே வந்தது? பிறரது சொத்துகளை வக்ஃபு வாரியம் ஆக்கிரமித்தாலோ அல்லது அவர்களின் சொத்தை பிற மதத்தினர் ஆக்கிரமித்தாலோ அதை மீட்கச் சட்டத்தின் இடம் இருக்கிறது. நீதிமன்றம் சென்று நீதியை யார் வேண்டுமானாலும் பெற முடியும். அப்படி இருக்கும் போது ஏன் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்? அப்படித்தான் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது.

கோயில் சொத்துகளைச் சிலர் முறைகேடாக அபகரித்துள்ளதாகப் புகார் அரசுக்கு தொடர்ச்சியாக வந்தது. அதனை எற்றுதான் நீதிக்கட்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கான தேவையை மக்கள் முன்வைத்தனர். அதனையொட்டி அதன் கரு உருவானது. இப்போது அப்படி வக்ஃபு வாரியம் சார்ந்து கோரிக்கை ஏதேனும் எழுந்ததா? நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலையும் காட்டவில்லை. இஸ்லாமியர்களும் அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லையே. ஆனால், சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இது அப்பட்டமான அரசியல் இல்லையா?

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்து நிறையச் சொத்துகள் வக்ஃபு வாரியத்திற்குத்தான் இருக்கிறது என்று உடனே ஒரு தகவலைப் பரப்புகிறார்கள். அது உண்மையா? அந்தத் தரவை யார் கொடுத்தது. இந்து சமய அறநிலையத்துறையிடம் எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பது அரசுக்குத்தான் தெரியும். அதைப்போல அரசுக்குத்தான் வக்ஃபு சொத்துகள் பற்றிய விவரம் தெரியும்.

தனி நபரால் அதைப் பெற முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி எங்கே போனது? அதைப் பற்றிய விவரத்தை அரசு வெளியிடுமா? வக்ஃபு வாரியத்தில் எவ்வளவு சொத்து இருந்தால் உங்களுக்கு என்ன? அது அரசு சொத்தா? பிறகு ஏன் அதைக் குறிவைக்கிறீர்கள். பாஜகவினருக்கு வக்ஃபு போர்டின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும். குறைத்தால்தான் அரசு அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம்.

Waqf Board PM Modi

வக்ஃபு போர்டு நிர்வாகத்தில் முஸ்லிம் இல்லாத இரண்டு பேர் இடம்பெற வேண்டும் எனச் சட்டத்தைத் திருத்துகிறார்கள். அந்த இரண்டு பேர் யார்? அவர்களின் அடையாளம் என்ன? இந்து சமய அறநிலையத்துறையில் பிரச்சினை வரும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத யாரும் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதே? அது வக்ஃபு போர்டுக்கு பொருந்தாதா? இந்து சமய துறைக்குள் வேறு மதத்தினர் இடம்பெற முடியுமா? அதை மத்திய அரசு அனுமதிக்குமா?

முதலில் வக்ஃபு வாரியம் வைத்துள்ள சொத்துகள் எங்கிருந்து வந்தது? இஸ்லாமிய மக்கள் வழங்கிய சொத்துகள் அவை. எப்படி இந்து கோயில்கள் மீது தங்களின் சொத்துகளை இந்துக்கள் எழுதி வைத்தார்களோ, அதேபோல இஸ்லாமியர்கள் அளித்த சொத்துகள் வக்ஃபு வாரியத்திடம் இருக்கிறது. அதில் எதற்காக வேறு மதத்தினரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்? அதன் நோக்கம் என்ன? பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை இந்த அரசு தனியாருக்கு விற்பனை செய்ததா இல்லையா?

அதைப்போல இந்த வக்ஃபு வாரிய சொத்துகளை அரசு விற்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இதன் மூலம் இந்து மத அரசியலைச் செய்யலாம் என பாஜக நினைத்தால் அது மிகப்பெரிய அடியாகவே போய் முடியும். மக்கள் அதிலிருந்து வெளிவர தொடங்கிவிட்டார்கள். இலங்கையில் புத்தமத அரசியல் என்ன ஆனது? வங்கதேசத்தில் இப்போது என்ன நடக்கிறது? அவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா?" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+