சக்கரத்தாழ்வார் தரிசனம் தந்த உற்சாகம்! தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் 'பளிச்'!
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் பதில்.
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்களை பட்டறை அடைத்துவைத்து திமுக பெற்ற வெற்றி ஒரு வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் கூறுவதற்கெல்லாம் தன்னால் கருத்துக் கூறிக்கொண்டு இருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே வரலாம் எனவும் தத்துவம் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதே அதை எதிர்கொள்வதற்கான பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிகவை தேர்தலுக்கு தயார்படுத்தி வரும் அவர் கூட்டணி விவகாரத்தில் மிகவும் உஷாராக இருக்கிறார். தற்போதைய சூழலில் பாஜகவுடனோ, அதிமுகவுடனோ தாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்த முறை கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.

கூட்டணி நிலைப்பாடு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே திமுகவுடனும் கூட்டணி பேசி சர்ச்சையில் சிக்கியது தேமுதிக. இதனால் கொஞ்ச காலம் துரைமுருகன் மீது கடும் கோபத்தில் இருந்தார் பிரேமலதா விஜயகாந்த். இதனிடையே இந்த முறை 6 மாதங்களுக்கு முன்பே கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்களை பட்டறை அடைத்துவைத்து திமுக பெற்ற வெற்றி ஒரு வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை
இதை வைத்து பார்த்தால் இவர் திமுக கூட்டணியை விரும்பவில்லை என்றே தெரிகிறது. இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் கூறுவதற்கெல்லாம் தன்னால் கருத்துக் கூறிக்கொண்டு இருக்க முடியாது எனவும் பிரேமலதா கடுகடுத்தார். பாஜக தனித்துப் போட்டி குறித்து அண்ணாமலை பேசியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என சிரித்தவாறு கூறி அது குறித்து மேலும் பேசுவதை தவிர்த்தார்.

சக்கரத்தாழ்வார் தரிசனம்
சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு வந்திருப்பதாகவும் வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே வரலாம் எனவும் பிரேலமலதா விஜயகாந்த் தத்துவம் பேசினார்.












Click it and Unblock the Notifications